ADDED : செப் 14, 2024 08:16 AM
பெங்களூரு: பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு நேரம், மதிப்பெண்ணை குறைத்து, கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில், பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதுவதற்கு, ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டு வந்தது. கூடுதலாக வினாத்தாள் படிப்பதற்கு 15 நிமிடங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு பாடத்துக்கும், 100 மதிப்பெண் வழங்கப்படும்.
மாணவர்களும் அதற்கேற்றார் போல் தயாராகி வருகின்றனர். இந்த நடைமுறையே பல ஆண்டுகளாக கர்நாடகாவில் உள்ளது. தற்போது, தேர்வு நேரத்தையும், மதிப்பெண்ணையும் குறைத்து, கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
அதாவது தேர்வு எழும் நேரம், 3 மணியில் இருந்து, 2:45 மணி நேரமாக்கி, 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த 15 நிமிடங்கள், வினாத்தாள் படிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மதிப்பெண்ணும் 100க்கு பதிலாக, 80 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம், நடப்பு கல்வி ஆண்டு முதலே அமலுக்கு வரும் என்று கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
