சி.ஏ.ஏ., முதல் இட ஒதுக்கீடு வரை 5 உத்தரவாதங்கள்: மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்
சி.ஏ.ஏ., முதல் இட ஒதுக்கீடு வரை 5 உத்தரவாதங்கள்: மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்
ADDED : மே 12, 2024 01:13 PM

கோல்கட்டா: குடியுரிமை திருத்தச்சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது என மேற்குவங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மேற்குவங்க மாநிலம் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் அரசு என்ன செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மோசடிகள் அதிகம் நடக்கின்றன. மாநில அரசின் பாதுகாப்பில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் செழித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியின் போது மக்கள் வறுமையில் வாடினர்.
ராமநவமி
மக்களின் ஆசிர்வாதத்தை நான் பெறுகிறேன். 2019ஐ விட பா.ஜ., பெரிய வெற்றியைப் பெறப் போகிறது. மேற்கு வங்கம் எங்களுக்கு முக்கியமான மாநிலம். இங்கு கனிம வளங்கள் அதிகம் உள்ளது. இந்த மாநிலங்களுக்கு சுற்றுலா வாய்ப்பும் உள்ளது. இப்போது மாநில அரசு ராமநவமியை கொண்டாட மக்களை அனுமதிக்கவில்லை. மேற்குவங்கத்தில் வீடுகளில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது.
இன்று நான் 5 உத்தரவாதங்கள் அளிக்கிறேன்.
* நான் இருக்கும் வரை மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க விட மாட்டேன்.
* எஸ்.சி, எஸ்.டி, மற்றும் ஓபிசி இட ஓதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.
* ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை யாராலும் ரத்து செய்ய முடியாது.
* ராமரை வணங்குவதையும், ராம நவமியைக் கொண்டாடுவதையும் யாராலும் தடுக்க முடியாது.
* குடியுரிமை திருத்தச்சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.