ADDED : மே 14, 2024 01:32 AM
மும்பை, வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த நாட்டின் பார்லிமென்டில் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நம் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம், கனடாவின் குற்றச்சாட்டை மறுத்தது.
இந்த விவகாரத்தால், கனடா -- இந்தியா இடையேயான துாதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் நான்கு பேரை, அந்த நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மஹாராஷ்டிராவின் மும்பையில் மேலும் கூறியதாவது:
நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக வெளிப்படையான விசாரணைக்கு இந்தியா தயாராக உள்ளது.
ஆனால், இந்த வழக்கை விசாரிக்கும் கனடா புலனாய்வு அமைப்பினர், இதுவரை உருப்படியான எந்த தகவலையும் நம் நாட்டுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. காலிஸ்தான் ஆதரவாளர்களை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் ஊக்குவிப்பது கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
