போலீஸ்காரரை மிரட்டி பணம் பறிப்பு 'ஹனிடிராப்' கும்பல் மீது வழக்கு
போலீஸ்காரரை மிரட்டி பணம் பறிப்பு 'ஹனிடிராப்' கும்பல் மீது வழக்கு
ADDED : செப் 08, 2024 06:55 AM
கலபுரகி: இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்து, போலீஸ்காரரை மிரட்டி 7 லட்சம் ரூபாய் பறித்த, 'ஹனிடிராப்' கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கலபுரகி டவுன் ஸ்டேஷன் பஜார் போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் மூன்று இளம்பெண்கள் அளித்த புகாரில், 'நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
'சமூக வலைத்தளம் மூலம் ராஜா லெங்கடி, 35, என்பவர் அறிமுகம் கிடைத்தது. வேலை வாங்கித் தருவதாக கூறி, எங்களை அழைத்துச் சென்று, ஹனிடிராப் எனும் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, பணம் பறிக்கும் தொழிலில் தள்ளினர்.
ஆசை வலை
'ராஜா லெங்கடி, அவரது கூட்டாளிகள் எட்டு பேர் எங்களை பலாத்காரம் செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.
புகாரின்படி, எட்டு பேர் மீதும் வழக்குப் பதிவானது. ராஜா லெங்கடி நேற்று கைது செய்யப்பட்டார்.
மற்ற ஏழு பேரையும் போலீசார் தேடுகின்றனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
ராஜா லெங்கடி, அவரது கூட்டாளிகள் ஏழு பேர் சேர்ந்து, அரசு அதிகாரிகள், தொழிலதிபர்களை குறிவைப்பர்.
அவர்களிடம் நைசாக பேசி, 'உல்லாசமாக இருக்க எங்களிடம் இளம்பெண்கள் உள்ளனர்' என, ஆசை வலை விரிப்பர்.
அந்த வலையில் விழுவோரை கலபுரகி டவுனில் உள்ள, லாட்ஜ்களுக்கு அழைத்துச் செல்வர்.
தொழில் அதிபர்
இளம்பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை புகைப்படம் எடுத்துக் கொள்வர்.
அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பணம் பறித்தது தெரிந்தது.
'ஹனிடிராப்' முறையில் போலீஸ்காரர் ஒருவரிடம் 7 லட்சம் ரூபாய், மஹாராஷ்டிரா தொழில் அதிபரிடம் 70 லட்சம் ரூபாய் பறித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.