எம்.எல்.ஏ., பெயரில் மோசடி பெண் உட்பட இருவர் மீது வழக்கு
எம்.எல்.ஏ., பெயரில் மோசடி பெண் உட்பட இருவர் மீது வழக்கு
ADDED : ஆக 01, 2024 11:08 PM

பெங்களூரு: பா.ஜ., -- எம்.எல்.ஏ., ரகுவின் லெட்டர் பேடில், 'போர்ஜரி' செய்து அந்தரங்க உதவியாளர் பணியில் அமர்ந்த பெண் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரின் சி.வி.ராமன் நகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ரகு. இவரது சிபாரிசின்படி, திவ்யா, 27, என்பவரை அந்தரங்க உதவியாளராக நியமித்து, ஜூலை 12ல் சட்டசபை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியானது.
இந்த உத்தரவை பார்த்து, எம்.எல்.ஏ., ரகு ஆச்சரியம் அடைந்தார். இவர் தனக்கு அந்தரங்க உதவியாளரை நியமிக்கும்படி, யாரையும் சிபாரிசு செய்யவில்லை. எனவே சட்டசபை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தகவல் கூறி, விசாரணை நடத்தும்படி வலியுறுத்தினார். விசாரணை நடத்திய போது, எம்.எல்.ஏ., ரகுவின் லெட்டர் பேடை, 'போர்ஜரி' செய்து, சிபாரிசு கடிதம் தயாரித்து பணியில் அமர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது
ராம்நகர், மாகடியின், கெம்போஹள்ளியின் திவ்யா, குடேமாரனஹள்ளியின் அஞ்சன்குமார் மீது, விதான்சவுதா போலீஸ் நிலையத்தில், சட்டசபை செயலர் லலிதா புகார் செய்துள்ளார். போலீசாரும் விசாரிக்கின்றனர்.
நான் தொடர்ந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், இதுவரை அந்தரங்க உதவியாளர் வேண்டும் என, சிபாரிசு செய்து கடிதம் எழுதியது இல்லை. என் கையெழுத்து மற்றும் லெட்டர் பேடை திவ்யாவும், அஞ்சன்குமாரும் தவறாக பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது சட்டசபை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
- எஸ்.ரகு, பா.ஜ., எம்.எல்.ஏ.,