சி.பி.ஐ., எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
சி.பி.ஐ., எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
ADDED : மே 03, 2024 12:54 AM
புதுடில்லி, அனுமதியின்றி சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்யும் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், 'சி.பி.ஐ., எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வராது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யவும், ரெய்டு நடத்தவும், சி.பி.ஐ.,க்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை மேற்கு வங்க அரசு 2018, நவம்பரில் திரும்பப் பெற்றது.
ஆனாலும், பல்வேறு வழக்குகளில் மாநில அரசின் அனுமதியின்றி சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து வருவதாக மேற்கு வங்க அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
இது தொடர்பாக, அரசியலமைப்பு சட்டம் 131வது பிரிவின் கீழ், மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு தாக்கல் செய்தது.
சட்டப்பிரிவு 131, மத்திய அரசுக்கும் - மாநிலங்களுக்கும் இடையிலான சர்ச்சையை தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பை உறுதி செய்கிறது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:
அரசியலமைப்பின் 131வது பிரிவு, உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட மிகப் புனிதமான அதிகார வரம்பில் ஒன்று. இந்த விதியை தவறாகப் பயன்படுத்துவதையும், துஷ்பிரயோகம் செய்வதையும் அனுமதிக்க முடியாது.
மேற்கு வங்க அரசு குறிப்பிட்டுள்ள வழக்குகள் மத்திய அரசால் பதியப்படவில்லை. அவற்றை சி.பி.ஐ., தான் பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ., மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.