மணிப்பூர் முதல்வர் மீது மத்திய அரசுக்கு நம்பிக்கையில்லையா: காங்., கேள்வி
மணிப்பூர் முதல்வர் மீது மத்திய அரசுக்கு நம்பிக்கையில்லையா: காங்., கேள்வி
UPDATED : ஜூன் 19, 2024 01:39 AM
ADDED : ஜூன் 19, 2024 01:20 AM

புதுடில்லி : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், மெய்டி மற்றும் கூகி இன மக்களுக்கு இடையேயான மோதல், கடந்தாண்டு மே மாதம் துவங்கியது. இதைத் தொடர்ந்து அங்கு பல வன்முறை சம்பவங்கள் நடந்தன. சமீபத்தில் இந்த சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
இதையடுத்து, அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதில், மாநில தலைமைச் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அங்கு அமைதி நிலவுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அமித் ஷா உத்தரவிட்டார். இது தொடர்பாக சில ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.
இது குறித்து, காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா நேற்று கூறியுள்ளதாவது: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு மெத்தனமாக இவ்வளவு நாள் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
இந்நிலையில், அங்குள்ள நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர் பைரேன் சிங்கை அந்தக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை.
இது முதல்வர் மீதான உங்களுடைய நம்பிக்கையில்லா தீர்மானமா. உங்களுடைய சொந்த முதல்வர் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா. ஆலோசனை கூட்டத்துக்கு முதல்வரை அழைக்காததற்கு காரணம் என்ன. இவ்வாறு அவர் கூறினார்.