UPDATED : ஜூலை 23, 2024 05:43 PM
ADDED : ஜூலை 23, 2024 01:28 PM

புதுடில்லி: 2024- 25ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை இன்று (ஜூலை 23) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது குறித்து தலைவர்களின் கருத்துகள் பின்வருமாறு:
பிரதமர் மோடிக்கு நன்றி
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எளிதாக வணிகம் செய்வதை ஊக்குவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கிறது. தொலைநோக்கு பார்வையுடன் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தயாரித்து உள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம், வளர்ந்த தேசமாக மாறும். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்
மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த இந்தியாவுக்கானதாக தெரியவில்லை. நிதி ஒதுக்காதது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம். பெயர் அளவுக்கு மட்டுமே வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக் கொள்ள பா.ஜ., நினைப்பது வேதனைக்குரியது.
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நடப்பு பட்ஜெட் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றக்கூடிய, நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்.
வளர்ச்சிக்கான பட்ஜெட்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: 7 வது முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பெருமை படைத்து உள்ளார். இது அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் வளர்ச்சி வளர்ச்சி என வருகிறது.பாஜ.,வின் 10 ஆண்டு பட்ஜெட்டின் தொடர்ச்சியான வளர்ச்சி பட்ஜெட் இது. புதிய இந்தியா நோக்கி தேசம் நகர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் எதிர்காலத்திற்கு ஏற்றது. விவசாயம், கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே காப்பி அடித்துள்ளனர். நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய பட்ஜெட்டை பா.ஜ., அரசு தயாரிக்கவில்லை. தனது அரசை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய பட்ஜெட்டை தயாரித்துள்ளனர்.
10 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எந்த திட்டமும் இல்லை. மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான பொருளாதார திறனை மேம்படுத்த எந்த சிறப்புத் திட்டமும் இல்லை.
தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை
பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் செயல். வேலைவாய்ப்பை பெருக்காத பிற்போக்குத்தனமான பட்ஜெட்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரசின் தேர்தல் அறிக்கையை படித்துள்ளார்.
காங். தேர்தல் அறிக்கையில் 30வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வேலை வாய்ப்புக்கான ஊக்கத்தொகை திட்டம் இடம்பெற்று உள்ளது. 11வது பக்கத்தில் இடம்பெற்றுள்ள அம்சமும் பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
காங்.,எம்.பி சசி தரூர்
பட்ஜெட்டில் பல விஷயங்கள் விடுபட்டுள்ளன. அடிமட்டத்தில் உள்ள 40 சதவீதத்தினரின் வருமானத்தை மேம்படுத்துவதற்காக எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. இன்று நம் நாட்டில் சமத்துவமின்மைக்கு தீர்வு காண்பது மிகக் குறைவாக உள்ளது.
ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திரா மாநில வளர்ச்சிக்கு திட்டங்களை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி. மாநிலத்தின் தேவைகளை உணர்ந்து பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. போலவரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி.
பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார்
பீஹார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, நான் தொடர்ந்து பேசி வருகிறேன். எனவே, அதற்கு பதிலாக, பீஹாருக்கு உதவி வழங்க வேண்டும். இப்போது அதை ஆரம்பித்துவிட்டார்கள்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மத்திய பட்ஜெட் அரசியல் சார்புடையது. மக்களுக்கு எதிரான பட்ஜெட். மேற்கு வங்க மாநில மக்கள் முற்றிலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏழை மக்களின் நலனை கவனத்தில் எடுத்துக் கொள்வில்லை.
அ.தி.முக., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,
பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. தற்போதைய அறிவிப்புகளால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு பாரபட்சம் காட்டியிருக்கிறது.
ஏமாற்றம் அளிக்கிறது!
பட்ஜெட்டில் வரி குறைப்பு, வேலைவாய்ப்புத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை, ஆனால் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ம.பி., முதல்வர் மோகன் யாதவ்
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வாழ்த்துகிறேன்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
2047க்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க, பிரதமர் மோடியின் கனவு, பட்ஜெட்டில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. இது வளர்ச்சி சார்ந்த பட்ஜெட். நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஏன் அலறுகின்றன?. பீஹார் மற்றும் ஆந்திராவுக்கு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
காங்., எம்.பி மாணிக்கம் தாகூர்
இந்த பட்ஜெட்டில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. ராகுலின் யோசனைகளை இந்த அரசு காப்பியடித்துள்ளது என்பதை காட்டுகிறது.
சமாஜ்வாதி கட்சி எம்.பி., டிம்பிள் யாதவ்
பெண்கள் பயன் அடையும் வகையில் எந்த திட்டமும் இல்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பா.ஜ., எம்.பி சுபாஷ்
பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இன்று, நாம் ஐந்தாவது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும். உற்பத்தித்திறன், வேலைவாய்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வரவேற்கிறோம்...!
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சோமிரெட்டி கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்பை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஆந்திரா மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விலைவாசி உயர்வு
திரிணமுல் காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் கூறியதாவது: வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நிதியமைச்சர் இந்தப் பிரச்னையை மிகத் தீவிரமாகக் கவனிக்க வேண்டும். உணவு விலைவாசி உயர்வு என்பது சாமானியர்களின் பிரச்னை. நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாத நிலையில், எதன் அடிப்படையில் இந்த பட்ஜெட்டை தயாரிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
3வது பொருளாதார நாடு
மத்திய அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் கூறியதாவது: அனைத்து சமுதாய மக்களுக்கும் பயன்பெறும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. மோடி அரசின் உத்தரவாதங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். இவ்வாறு அவர் கூறினார்.
வேலையில்லா திண்டாட்டம்
''பீஹார் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகப்படுத்தியுள்ளனர். விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் வரை, மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை,'' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: 10 ஆண்டுகால வளர்ச்சியின் ஒருங்கிணைப்பாகவும், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மிகுந்த ஏமாற்றம்
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. சுதந்திரம் அடைந்த பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பை சரியான நேரத்தில் நடத்தத் தவறியது இதுவே முதல்முறை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக
திமுக.,வின் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ''கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்ததோ அதை அப்படியே இந்த முறையும் தொடர்கிறது. இதற்கு முன் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 6 பட்ஜெட்டில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இதுவரை நிறைவேற்றவில்லை. பா.ஜ., ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளும் பட்ஜெட் இது'' என்றார்.