/
செய்திகள்
/
இந்தியா
/
வக்பு சட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு பெண்களுக்கு வாய்ப்பு; சொத்து அதிகாரத்தில் கட்டுப்பாடு வருகிறது பார்லிமென்டில் விரைவில் தாக்கலாகிறது மசோதா
/
வக்பு சட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு பெண்களுக்கு வாய்ப்பு; சொத்து அதிகாரத்தில் கட்டுப்பாடு வருகிறது பார்லிமென்டில் விரைவில் தாக்கலாகிறது மசோதா
வக்பு சட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு பெண்களுக்கு வாய்ப்பு; சொத்து அதிகாரத்தில் கட்டுப்பாடு வருகிறது பார்லிமென்டில் விரைவில் தாக்கலாகிறது மசோதா
வக்பு சட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு பெண்களுக்கு வாய்ப்பு; சொத்து அதிகாரத்தில் கட்டுப்பாடு வருகிறது பார்லிமென்டில் விரைவில் தாக்கலாகிறது மசோதா
UPDATED : ஆக 06, 2024 01:17 AM
ADDED : ஆக 06, 2024 01:06 AM
புதுடில்லி:சொத்துக்களை நிர்வகிக்கும் வக்பு வாரியங்களின் அதிகாரத்தில் திருத்தம் செய்வது, பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பது உட்பட, வக்பு சட்டத்தில் 40 திருத்தங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில் இது தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் உரிமை@@
இஸ்லாத்தின்படி, மதம் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காக கடவுளின் பெயரில் சொத்துக்களை தானமாக வழங்குவதே, வக்பு என்று அழைக்கப்படுகிறது.
இதன்படி, எந்த ஒரு அசையும் அல்லது அசையா சொத்துக்களை, இந்த பணிகளுக்காக நன்கொடையாக வழங்கலாம்.
இதன் வாயிலாக வழங்கப்படும் நிலங்களில் கிடைக்கும் வருவாய், பள்ளி வாசல், தர்காக்கள், கல்வி மேம்பாடு உட்பட பல பணிகளுக்கு பயன்படுத்தப்படும். தானமாக வழங்கப்பட்ட பின், அதன் மீது, தானமாக வழங்கியவரின் குடும்பத்தில் உள்ள எவரும் எதிர்காலத்தில் உரிமை கோர முடியாது.
இது போன்ற தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை பராமரிக்க, 1954ம் ஆண்டில் வக்பு வாரிய சட்டம் இயற்றப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2013ல் பல மாற்றங்களை செய்தது.
இதன்படி, புதிய சட்டம் அமலுக்கு வந்தது. வக்பு வாரிய சட்டத்தின்படி, மாநில அளவில் வக்பு வாரியங்களும், தேசிய அளவில் வக்பு கவுன்சிலும் அதன் செயல்பாடுகளை கவனித்து வருகின்றன.
சொத்துக்களுக்கு உரிமை கோருதல், அதன் மீது மேல்முறையீடு செய்வது என, பல பிரச்னைகள் சமீபகாலமாக எழுந்துள்ளன. மேலும், பல சொத்துக்களை வக்பு சொத்துக்களாக அறிவித்து உரிமை கோருவதாகவும் புகார்கள் எழுந்தன.
எதிர்பார்ப்பு
தமிழகத்தில் வேலுார், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதுபோல, நாட்டின் பல பகுதிகளில் பிரச்னை உள்ளது. டில்லியில் மட்டும் 198 புகார்கள் உள்ளன.
இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, 40 திருத்தங்கள் வரை செய்யப்பட்டுள்ளன.
இதற்கான மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துக்களுக்கு உரிமை கோரும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவது, மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அளிப்பது உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வக்பு வாரியங்கள், சொத்துக்கு உரிமை கோரும்போது, அதை ஆய்வு செய்து உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது.
அதுபோல, வக்பு வாரியங்களின் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலங்கள் தொடர்பாகவும் ஆய்வுகள் நடத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
சர்ச்சை
குறிப்பாக, வக்பு வாரியத்தில் உள்ள அனைத்து சொத்துக்களையும், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் முன்னிலையில் முறைப்படி பதிவு செய்து, அந்த விபரங்களை வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற திருத்தமும் இதில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நாடு முழுதும், 3-0 வக்பு வாரியங்கள் உள்ளன.
புள்ளி விபரங்களின்படி, தற்போது நாடு முழுதும், 9.40 லட்சம் ஏக்கர் அளவுக்கு, 8.70 லட்சம் சொத்துக்கள், வக்பு வாரியங்களிடம் உள்ளன.
இவற்றின் வாயிலாக, ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது மிகவும் குறைத்து காட்டப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதையடுத்து, வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும், அதன் கட்டுக்கடங்காத அதிகாரத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையிலும், வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஹிந்து - முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதே, பா.ஜ.,வின் ஒரே நோக்கம். தற்போது, அரசியலமைப்பில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பறிக்க, அக்கட்சி முயற்சிக்கிறது. பார்லி.,யில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
துவக்கத்தில் இருந்தே, வக்பு வாரியங்கள் மற்றும் அவற்றின் சொத்துக்களுக்கு எதிராக பா.ஜ., உள்ளது. வக்பு வாரியத்தின் சுயாட்சியை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பறிக்க விரும்புகிறது.
அசாதுதீன் ஓவைசி
தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,
நன்மை பயக்கும்
வக்பு வாரிய சட்டத்திருத்தம் குறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
வக்பு வாரிய சொத்துக்களை முஸ்லிம்களிடமிருந்து பறிக்கும் நோக்கம் அரசிடம் இல்லை. இந்த சொத்துக்கள் அனைத்தும், முஸ்லிம் சமூகத்தின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன. வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது, ஒரு முறையான நடைமுறை.
இதனால் கிடைக்கும் பலன்கள், ஏழைகளுக்கு நேரடியாக சென்றடையும். வக்பு வாரியத்தின் ஒவ்வொரு சொத்தையும், கலெக்டரிடம் தெரிவிக்க புதிய சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, வருவாய் இறுதியில் கணக்கிடப்படும்; இது, முஸ்லிம்களுக்கே நன்மை பயக்கும்.
இந்த சட்டத்துக்கு, முஸ்லிம் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது முஸ்லிம்களுக்கு எதிரானது என, அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது முற்றிலும் தவது. சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற முஸ்லிம்கள், இந்த சட்டத்திருத்தத்தை, 'முன்னோக்கிய சீர்திருத்தம்' என, குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா, வரும் 9 அல்லது கூட்டத்தொடரின் கடைசி நாளான, 12ம் தேதி, பார்லி.,யில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த முடியாவிட்டால், அடுத்த பார்லி., கூட்டத்தொடரில், சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தேசியத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் ரஸ்வி பரேல்வி கூறியுள்ளதாவது:
வக்பு வாரியத்தின் சொத்துக்கள் என்பது முஸ்லிம்களின் கல்வி, ஆதரவில்லாத குழந்தைகள் மற்றும் கணவரை இழந்தவர்களின் நன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், வக்பு வாரியத்தின் பல உறுப்பினர்கள், நில மாபியாக்களுடன் இணைந்து, வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு செய்துள்ளனர். வாரியத்தின் சொத்துக்களை, சட்டவிரோதமாக விற்றுள்ளனர்.
இதுபோல பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. வக்பு வாரியங்கள் உரிய முறையில் செயல்பட்டிருந்தால், நம் நாட்டில் முஸ்லிம்கள் வளர்ச்சி அடைந்திருப்பர்.
வக்பு வாரியங்களில் நடந்த முறைகேடுகள் தெரிந்திருந்தாலும், பல மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள், இத்தனை காலம் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளன. வக்பு வாரிய சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள், இதுபோன்ற குறைபாடுகள், குளறுபடிகளுக்கு தீர்வு காணும் என்று நம்புகிறோம். அதனால், மத்திய அரசின் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.