ADDED : ஆக 15, 2024 03:41 AM

தங்கவயல், : தங்கவயல் நகராட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 22ம் தேதி நடக்கிறது.
தங்கவயல் நகராட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள். இதில் முதல் இரண்டரை ஆண்டுகள் பதவிக் காலம் 2023 மே மாதத்துடன் முடிவடைந்தது. இரண்டாம் கட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தி, தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
ஆனால், மாநிலம் முழுதுமே தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவித்ததில் குளறுபடி நிலவியது. சில நகராட்சிகளின் கவுன்சிலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், தேர்தல் நடத்தாமல் அதிகாரிகள் பொறுப்பில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படாமல் 15 மாதங்கள் கடந்தன. இதையடுத்து, தேர்தல் நடத்துமாறு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக அரசின் நகர வளர்ச்சித் துறை, கடந்த 5ம் தேதி, இட ஒதுக்கீட்டை அறிவித்தது.
இதன்படி, தங்கவயல் நகராட்சி தலைவர் பதவி- எஸ்.சி., பெண் பிரிவுக்கும், துணைத் தலைவர் பதவி, பிற்படுத்தப்பட்டோர் ஏ பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தங்கவயல் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 22ம் தேதி தேர்தல் நடக்கும் என, கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கோலார் மாவட்ட உதவி கலெக்டர் தேர்தலை நடத்துவார்.
இடஒதுக்கீடுபடி, போட்டியிட விரும்பும் தகுதியுடையவர்கள், வரும் 22ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அன்று பகல் 1:00 மணிக்கு மனு மீது பரிசீலனை; பின் விருப்பம் உள்ளவர்கள் வாபஸ் பெறலாம். தேவைப்பட்டால் அன்றே தேர்தல் நடத்தி முடிவு அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் தரப்பில் யாரை நிறுத்துவது என தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.