ஆந்திரா எம்.எல்.ஏக்களில் முதல் பணக்காரர் சந்திரபாபு நாயுடு;ஜெகன் மூன்றாமிடம்
ஆந்திரா எம்.எல்.ஏக்களில் முதல் பணக்காரர் சந்திரபாபு நாயுடு;ஜெகன் மூன்றாமிடம்
UPDATED : ஜூன் 08, 2024 11:33 PM
ADDED : ஜூன் 08, 2024 11:02 PM

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் அதிக சொத்து மதிப்பு கொண்டவராக சந்திரபாபு நாயுடு முதலிடமும் , ஜெகன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள 175 சட்டசபை தொகுதிக்கு கடந்த மே மாதம் 13 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் தெலுங்கு தேச கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. பவன் கல்யாண் கட்சி 21 இடங்களிலும் ஒய் .எஸ் .ஆர். காங்., 11 இடங்களிலும் பா.ஜ., 8 இடங்களிலும் வெற்றி பெற்றது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு விவரம் குறித்து டில்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 134 எம்.எல்.ஏக்களில் 127 பேர் (95 சதவீதம்) குரோர்பதிகள் எனவும், பா.ஜ.,வில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 பேரும் குரோர்பதிகள் (100 சதவீதம்) பவன் கல்யாண் கட்சியினர் 21 பேரில் 18 பேர் குரோர்பதிகள் (86 சதவீதம்) ஒய்.எஸ்.ஆர் கட்சியின்11 பேரில் 9 பேர் குரோர்பதிகள்(82 சதவீதம்) என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 65.07 கோடி அதே நேரத்தில் வெற்றி பெற்ற 134 தெலுங்குதேச கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 67.97 கோடி, பா.ஜ.வின் 8 எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 34.29 கோடி,ஒய்.எஸ். ஆர் காங்., கட்சியின் 11 எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு 99.19 கோடி, ஜனசேனாவின் 21 எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்துமதிப்பு 40.43 கோடி
இதனிடையே அதிக பணம் கொண்டவர்கள் வரிசையில் சந்திரபாபு நாயுடு , கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் நாராயணா மற்றும் ஜெகன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். ரூ.931 கோடியுடன் நாயுடு முதல் இடத்தையும், 824 கோடியுடன் நாராயணா இரண்டாம் இடத்தையும்,ரூ.757 கோடியுடன் ஜெகன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.