சந்திரபாபுவின் வாக்குறுதிகள் சாத்தியமில்லாதவை: ஜெகன்
சந்திரபாபுவின் வாக்குறுதிகள் சாத்தியமில்லாதவை: ஜெகன்
ADDED : ஏப் 29, 2024 06:35 AM

அனந்தபூர் : ''தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு செயல்படுத்துவதாகக் கூறும் திட்டங்கள் நடைமுறை சாத்தியமற்றவை,'' என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, லோக்சபா மற்றும் சட்டசபைக்கு மே 13ல் தேர்தல் நடக்கிறது.
பா.ஜ., மற்றும் ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிரசார கூட்டங்களில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அனைத்து வீடுகளுக்கும் ஆண்டுக்கு மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்கள், பள்ளி செல்லும் அனைத்து மாணவியருக்கும் ஆண்டுக்கு 15,000 ரூபாய் உதவித் தொகை, அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 20,000 ரூபாய் நிதியுதவி, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளார். ஏழை பெண்களுக்கு இலவச வீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அனந்தபூர் மாவட்டம் தாதிபத்ரியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:
சந்திரபாபு நாயுடு, பொய்யான மற்றும் போலியான வாக்குறுதிகளுடன் மீண்டும் வந்துள்ளார். நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளை புனித நுாலாகக் கருதி நிறைவேற்றி உள்ளோம். நேரடி பலன்கள் பரிமாற்றம் வாயிலாக, 2.70 லட்சம் கோடி ரூபாயை பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தி உள்ளோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.31 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள், கிராம மருத்துவமனைகளை புதுப்பித்தல், சுகாதார சேவைகளை வீடுகளுக்கே சென்று வழங்குதல் ஆகியவை ஊழலின்றி செயல்படுத்தப்பட்டன. ஆனால், சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ள எந்த திட்டத்தையுமே செயல்படுத்த முடியாது. அவை, நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகள். இவ்வாறு அவர் பேசினார்.

