மாறியது நெஞ்சம்... மாற்றியவர் யாரோ...! திங்களேஸ்வர சுவாமிகள் பின்னணியில் காங்.,
மாறியது நெஞ்சம்... மாற்றியவர் யாரோ...! திங்களேஸ்வர சுவாமிகள் பின்னணியில் காங்.,
ADDED : ஏப் 04, 2024 04:29 AM

தார்வாட், : தார்வாட் லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக பிரஹலாத் ஜோஷி போட்டியிட, திங்களேஸ்வர சுவாமிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதன் பின்னணியில், காங்கிரசின் கைவரிசை உள்ளதாக பா.ஜ., தலைவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில், தார்வாட் தொகுதியில் பிரஹலாத் ஜோஷி, பா.ஜ., வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவர் மற்ற சமுதாயங்களை அலட்சியம் செய்கிறார். எனவே அவர் போட்டியிட கூடாது என, திங்களேஸ்வர சுவாமிகள் எதிர்ப்புத் தெரிவித்தார். இவருடன் பல மடாதிபதிகள் 'கை'கோர்த்துள்ளனர்.
தார்வாட் தொகுதியில் வேட்பாளரை மாற்றாவிட்டால், சுயேச்சை வேட்பாளராக களமிறங்க திங்களேஸ்வர சுவாமிகள் தயாராவதாக கூறப்படுகிறது. இது பா.ஜ.,வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரஹலாத் ஜோஷிக்கு எதிராக, சுவாமிகளை துாண்டிவிட்டதில், காங்கிரசாரின் கைவரிசை உள்ளதாக பா.ஜ., தலைவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக, தார்வாட் பா.ஜ., தலைவர்கள் கூறியதாவது:
பிரஹலாத் ஜோஷி போட்டியிடுவதில், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என, திங்களேஸ்வர சுவாமிகள் கூறியிருந்தார். மொத்த லிங்காயத் சமுதாயமும் ஜோஷிக்கு ஆதரவாக நிற்கும் என, உறுதி அளித்தார். ஆனால் திடீரென, ஜோஷிக்கு எதிராக திரும்பி உள்ளார். இதன் பின்னணியில் காங்கிரசார் உள்ளனர்.
தார்வாட் மட்டுமின்றி, மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நாங்கள் இதே பிரச்னைகளை அனுபவிக்கிறோம். திங்களேஸ்வர சுவாமிகளின் குற்றச்சாட்டு உண்மை என்றால், தன் எதிர்ப்பை கைவிட்டு பிரஹலாத் ஜோஷியை வேட்பாளராக்க ஒப்புக்கொண்டது ஏன்? வேட்பாளர் அல்லது அரசியல் முடிவுகளை தீர்மானிப்பது, மடாதிபதிகளின் வேலையல்ல. அது வாக்காளர்களின் கடமை என, சில மடாதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பல மடாதிபதிகள் ஒரே கருத்தை கொண்டுள்ளனர். ஆனால் வெளிப்படையாக கூற தயங்குகின்றனர். இப்போது இல்லையென்றாலும், வரும் நாட்களில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

