ADDED : ஏப் 24, 2024 01:29 AM
புதுடில்லி, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஜாபர் சேட் மனைவி எம்.பர்வின் மீதான குற்றப்பத்திரிகையை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
தமிழக காவல் துறையில் கூடுதல் டி.ஜி.பி.,யாக பணியாற்றியவர் எம்.எஸ்.ஜாபர் சேட். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், 2009ல் பணியில் இருந்து போது, தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழகத்தின் சென்னையில் உள்ள திருவான்மியூரில், தமிழக வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து முறைகேடாக வீட்டு மனை பெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக ஜாபர் சேட் மனைவி எம்.பர்வின் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், எம்.பர்வின் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தன் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், எம்.பர்வின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பர்வின் மீதான குற்றப் பத்திரிகையை, நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும், 2022 நவம்பரில், அவர் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.
