75 ஆண்டுகளுக்கு பின் தேர்தலை சந்தித்த சத்தீஸ்கர் கிராம மக்கள்
75 ஆண்டுகளுக்கு பின் தேர்தலை சந்தித்த சத்தீஸ்கர் கிராம மக்கள்
ADDED : பிப் 25, 2025 02:41 AM

சுக்மா: நக்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் கேர்லபெண்டா கிராமத்தில், 75 ஆண்டுகளுக்கு பின், நேற்று நடந்த பஞ்சாயத்து தேர்தலில், வாக்காளர்கள் ஆர்வமாக ஓட்டளித்தனர்.
ஓட்டளித்த பலரும், 'துப்பாக்கி சத்தத்தை விட ஓட்டு தான், எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்' என்றனர்.
மத்திய பிரதேசத்திலிருந்து, 2000ம் ஆண்டில் பிரிக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் முதல்வராக உள்ளார்.
நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள அந்த மாநிலத்தின், சுக்மா மாவட்டத்தில் உள்ள கேர்லபெண்டா என்ற கிராமம், 75 ஆண்டுகளுக்கு பின், தேர்தலை நேற்று முன்தினம் சந்தித்தது.
நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகும் நிலையில், 75 ஆண்டுகளாக அந்த பகுதியில் எந்த தேர்தலும் நடைபெறவே இல்லை.
நக்சல் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த அந்த பகுதி, இப்போது மெல்ல விடுபட்டு வருகிறது.மொத்தம் மூன்று கட்டங்களாக அந்த பகுதியில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில், நேற்று முன்தினம் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் உற்சாகமாக ஓட்டளித்த மக்கள் கூறியதாவது:
சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் சொந்த வாகனங்களில் இந்த ஊருக்கு வந்து ஓட்டளித்தனர்.
வளர்ச்சியை நோக்கி நாங்கள் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் முறையாக எங்களின் கோரிக்கைகளை, தலைவர்கள் முன் சொல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
துப்பாக்கிகளை விட, ஓட்டு தான் எங்கள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என முழுமையாக நம்புகிறோம்.
இவ்வாறு கூறினர்.
சமீபகாலமாக, நக்சல்களுக்கு எதிரான தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.
வரும் 2026க்குள் நக்சல் இல்லாத மாநிலமாக சத்தீஸ்கர் மாறும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்பு படையினர் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், சத்தீஸ்கரில் 40 நக்சல்கள் உயிரிழந்தனர்.