
பாசப்பிணைப்பு
நடிகர் ரவிச்சந்திரன், சில ஆண்டுகளுக்கு முன், ரவி போப்பண்ணா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின், ப்யார் என்ற படத்தில் நடிக்கிறார். புதுமுகங்கள் பரத், ரஷிகா ஷெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியின் தந்தையாக ரவிச்சந்திரன் நடிக்கிறார். தந்தை, மகளின் பாசப்பிணைப்பை, அன்பின் ஆழத்தை கூறும் கதையாகும். தந்தையாக நடிக்க மிகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். ஏற்கனவே 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ளது.
தாய் சென்டிமென்ட்
பெரும்பாலும் புதியவர்களே நடிக்கும், நான் போலி திரைப்படத்தின் பாடல்கள், சமீபத்தில் வெளியானது. யஷ்வந்த் கதை எழுதி, இயக்குவதுடன், நாயகனாகவும் நடித்துள்ளார். ஹரிஷ், திஷா ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நட்பு, காதல், தாய் சென்டிமென்ட் சுற்றி கதை நகர்கிறது. நடுத்தர மற்றும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த நண்பர்கள் இடையிலான நட்பை விவரிக்கிறது. மூத்த நடிகர் தேவராஜ், வில்லனாக நடித்துள்ளார். பெங்களூரின் சுற்றுப்பகுதிகளில், படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவுள்ளது.
உண்மை சம்பவம்
மஞ்சேஷ் இயக்கத்தில் திரைக்கு வந்த சஹரா திரைப்படம் வெற்றி பெற்றது. அதே உற்சாகத்தில் அவர் கனசொந்து சுருவாகிதே என்ற படத்தை இயக்குகிறார். அவர் இயக்கும் இரண்டாவது படமாகும். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. சந்தோஷ் பில்லவ் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சாத்விகா நடிக்கிறார். சமீபத்தில் நடிகர் கிருஷ்ணா டிரெய்லர் வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். பெங்களூரு, குந்தாபுரா, குனிகல் சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் திரில்லர் மஞ்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமூக அக்கறை
கன்னடத்தில் சைக்கலாஜிகல் திரில்லர் கதை கொண்ட படங்கள், அவ்வப்போது திரைக்கு வருகிறது. மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. தற்போது அந்த வரிசையில், கபடியும் சேர்ந்துள்ளது. நடிகை சுக்ருதா வாக்லே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் டிரெய்லர் வெளியானது. மார்ச் 7ம் தேதி திரைக்கு கொண்டு வர, தயாராகின்றனர். மென் பொறியாளரான ரவி கிரண், இந்த படத்தை இயக்கி உள்ளார். தயாரிப்பிலும் பங்கேற்றுள்ளார். மொபைல் போன் உட்பட டிஜிட்டல் தொழில்நுட்பங்களால், மக்கள் எப்படி மோசடிக்கு ஆளாகின்றனர் என்பதை, படத்தில் விவரித்துள்ளனர். சமூக அக்கறையும் படத்தில் உள்ளது.
மண்ணின் பெருமை
நமது மண்ணின் பெருமையை உணர்த்தும் கதை கொண்ட திரைப்படம் 'க்ஷேத்ரபதி' திரைப்படம், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வெற்றி கரமாக ஓடுவதால் படக்குழுவினர் குஷி அடைந்துள்ளனர். அர்ச்சனா ஜோயிஸ், அச்யுத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிவராத்திரி நாளன்று, இந்த படம் கன்னட தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது. விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் இவர்களின் கஷ்டங்களை, யாரும் கண்டு கொள்வதில்லை. இத்தகைய சமூக பிரச்னைகளை விவரிக்கும் கதை கொண்டது. அமெரிக்காவில் இன்ஜினியரான நாயகன், தன் தந்தைக்காக விவசாயத்தில் ஈடுபடும் கதை. விவசாயிகளின் பிரச்னைகளை கோடிட்டு காட்டியுள்ளனர்.
நடிப்பு + தயாரிப்பு
கர்நாடக உயர்நீதிமன்றத்தில், வக்கீலாக பணியாற்றிய விஸ்வாஸ் சங்கர், தற்போது திரையுலகில் நுழைந்து நடிகராகி உள்ளார். இவர் ஹிந்தி நடிகர் விஜய் வர்மா சாயலில் தென்படுகிறார். சஹனா மூர்த்தி இயக்கும், இன்போசிஸ் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சங்கரின் மகன். நடிப்பதுடன், தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஜோடியாக மான்விதா நடித்துள்ளார். சஹனா மூர்த்தி ஏற்கனவே பல படங்களை தயாரித்து வெற்றி கண்டவர். படத்தில் மற்றொரு நாயகியை தேடுகின்றனர்.