ADDED : ஏப் 19, 2024 06:22 AM

மைசூரு: ''பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு குமாரசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு விட்டார். ஆனால், சித்தராமையா ஒரு பெண்ணின் சேலையை பிடித்து இழுத்ததற்காக மன்னிப்பு கேட்டாரா,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் கேள்வி எழுப்பினார்.
மைசூரில் அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்த கலிமுல்லா கான், 2006ல் சாமுண்டீஸ்வரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு குமாரசாமி ஆதரவு அளித்தார்.
காங்கிரஸ் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, கலிமுல்லா கான் தன் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதனால் சித்தராமையா, இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.
குமாரசாமியின் ஆதரவையும் மீறி, காங்கிரசுக்கு கலிமுல்லா கான் ஆதரவு அளித்ததால், சித்தராமையாவுக்கு அரசியல் மறுபிறவி கிடைத்தது. அதன்பின் இரண்டு முறை முதல்வராக இருந்த போதும், இதுவரை கலிமுல்லா கானுக்கு உரிய அந்தஸ்து வழங்காத நன்றி கெட்ட தலைவர் சித்தராமையா.
மோடி மீண்டும் பிரதமர் ஆவதை யாராலும் தவிர்க்க முடியாது. இந்த தேர்தலில் பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். நாட்டின் முக்கிய மாநிலங்களில் காங்கிரஸ் படுமோசமான நிலையை எட்டி உள்ளது. குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டு, ஆட்சிக்கு வருவது எப்படி சாத்தியமாகும்.
பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு குமாரசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால், நீங்கள் (சித்தராமையா), ஒரு பெண்ணின் சேலையை பிடித்து இழுத்ததை மறந்து விட்டீர்களா. இதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களா. இப்பிரச்னையை காங்கிரசார் பெரிதாக்குகின்றனர். அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

