ADDED : மே 05, 2024 11:39 PM

புதுடில்லி: இந்தியா - நேபாள எல்லையில் அமைந்துள்ள லிபுலே, லிம்பியாதுரா மற்றும் காலாபாணி பகுதிகள் இந்திய கட்டுப்பாட்டு பகுதிகள் என, மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
அந்த பகுதிகள் மீது நேபாளமும் உரிமை கோரி வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பேச்சு நடந்து வருகிறது.
மானசரோவர் யாத்திரை செல்பவர்கள் வசதிக்காக, உத்தரகண்டின் தார்சுலாவில் இருந்து லிபுலேவுக்கு புதிய சாலை அமைத்து, 2020, மே மாதம் திறக்கப்பட்டது. இதற்கு நேபாள அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், நேபாளத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகளை மறுவடிவமைப்பு செய்ய, அந்நாட்டு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இதை தொடர்ந்து, புதிய 100 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள நேபாள வரைபடத்தில், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள லிபுலே, லிம்பியாதுரா மற்றும் காலாபாணி உள்ளிட்ட பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
நேபாள எல்லை விவகாரம் குறித்து, முறையான பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இதற்கு நடுவில், ஒருதலை பட்சமாக சில முடிவுகளை அவர்கள் எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த விவகாரத்தில், இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி, மூன்று இந்தியர்களை கனடா போலீசார் கடந்த 3ம் தேதி கைது செய்தனர்.
இது குறித்து, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ''கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்களுக்கு வேறு குழுக்களுடன் தொடர்பு இருக்கலாம்.
''போலீசார் விசாரித்து அது பற்றிய தகவலை எங்களுக்கு தெரியப்படுத்தினால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கருத்து கூற முடியும்,'' என்றார்.