கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்: கலெக்டர்களுக்கு முதல்வர் 'சாட்டை'
கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்: கலெக்டர்களுக்கு முதல்வர் 'சாட்டை'
ADDED : மே 24, 2024 06:20 AM

பெங்களூரு: ''கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகித்தால், மாவட்ட கலெக்டர்கள் தான் முழு பொறுப்பு. லோக்சபா தேர்தல் முடிந்துள்ளதால், அதிகாரிகள் வளர்ச்சி பணிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்,'' என கலெக்டர்களுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் சில நாட்களாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
பல பகுதிகளில், வீடுகளுக்கு மழை நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் ஆறாக ஓடுகிறது.
சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் ஓட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட உயர் அதிகாரிகள் பெங்களூரில் நேற்று முன்தினம் நகர்வலம் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
வீடியோ கான்பரன்ஸ்
இந்நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகளுடன், முதல்வர் நேற்று பெங்களூரில் இருந்தவாறு, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது முதல்வர் பேசியதாவது:
கர்நாடகாவில் மார்ச் 1ம் தேதி முதல், நேற்று வரை 12.3 செ.மீ., மழை பெய்துள்ளது. இதில், 8 மாவட்டங்களில் அதிக மழையும், 8 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது.
அனைத்து அணைகளிலும் சேர்த்து, 20 சதவீதம் நீர் உள்ளது. இன்னும் மழை பெய்யும் என்பதால், அணைகளின் நீர் மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. இம்முறை தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழையால் விவசாயிகள், விவசாய பணிகளை ஆரம்பித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள், ஜூன் 6ம் தேதி வரை இருந்தாலும், அவசரகால பணிகள் செய்யலாம்.
பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களுக்கு, ஜூன் இறுதிக்குள், உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வளர்ச்சி பணிகளுக்கு விரைவாக டெண்டர் பணிகள் முடிக்க வேண்டும்.
மைசூரில் காலரா
லோக்சபா தேர்தல் முடிந்துள்ளதால், அதிகாரிகள் வளர்ச்சி பணிகள் மீது கவனம் செலுத்த வேண்டும். மைசூரின் இரண்டு கிராமங்களில் காலரா பரவி வருகிறது.
இதற்கு, கழிவு நீர் கலப்படம் தான் காரணம். இதற்கு பொறியாளர்களே காரணம். குடிநீரை பரிசோதிக்காமல் பொறியாளர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர்.
பரிசோதிக்காமல் குடிநீர் வழங்கினால், மாவட்ட அளவிலான அதிகாரிகள் பொறுப்பு. அத்தகையோர் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகித்தால், கலெக்டர்கள் தான் முழு பொறுப்பு.
விவசாயிகளுக்கு அவ்வப்போது உரம் வழங்க வேண்டும். விவசாய பணிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம், கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நிவாரண நிதியை, அவர்களின் கடனில் பிடித்தம் செய்யாமல் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
842 விவசாயிகள்
அனைத்து உள்ளாட்சிகளிலும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கலெக்டர்கள் வங்கி கணக்குகளில், 826 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. கடந்த நிதியாண்டில், 842 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மழையால், உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி, குடகு ஆகிய மாவட்டங்களில் பலர் இறந்துள்ளனர். அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், பலி எண்ணிக்கையும் உயரும் வாய்ப்பு உள்ளதால், அதிகாரிகள் எச்சரிக்கை வகிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் கிருஷ்ணபைரே கவுடா, எச்.கே.பாட்டீல், முனியப்பா, செலுவராயசாமி, பைரதி சுரேஷ், சிவராஜ் தங்கடகி, பிரியங்க் கார்கே, ரஹீம் கான், சிவானந்த பாட்டீல், மல்லிகார்ஜுன், சந்தோஷ் லாட், மாநில தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயல் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.