'பீச்'சில் 'சரக்கு' அடித்த மாணவர்கள் கடலோர பாதுகாப்பு படை அதிரடி
'பீச்'சில் 'சரக்கு' அடித்த மாணவர்கள் கடலோர பாதுகாப்பு படை அதிரடி
ADDED : ஜூன் 21, 2024 05:38 AM

உத்தரகன்னடா: பிரசித்தி பெற்ற கோகர்ணா கடற்கரையில், புகை பிடித்து, மதுபானம் அருந்தி அசுத்தம் செய்த மாணவர்களுக்கு, கடலோர பாதுகாப்பு படையினர் பாடம் புகட்டினர்.
உத்தரகன்னடாவின் கோகர்ணா, பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். சிலர் கடற்கரையில் புகை பிடித்தும், மதுபானம் அருந்தியும் சூழ்நிலையை பாழாக்குகின்றனர்.
நேற்று முன்தினம், கோகர்ணா கடற்கரைக்கு வந்த வாலிபர்கள், மது அருந்தி, சிகரெட் பிடித்தும், அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதை பார்த்த அப்பகுதியினர், கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த கடலோர காவல் படையினர், வாலிபர்களை விசாரித்த போது அவர்கள் மாணவர்கள் என்பது தெரிந்தது. இவர்கள் பெங்களூரின் கல்லுாரி ஒன்றில் படிப்பதும் தெரிந்தது. 36 மாணவர்கள், கல்லுாரி முதல்வருடன் சுற்றுலா வந்தனர்.
போலீசார், முதல்வரிடம் விசாரித்தனர். அவரும் மன்னிப்பு கேட்டு, இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என, வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட போலீசார், கடற்கரையை சுத்தம் செய்துவிட்டு செல்லும்படி அறிவுறுத்தினர். மாணவர்கள் பீர் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட மற்ற அசுத்தங்களையும் சேர்த்து சுத்தம் செய்தனர்.
அதன்பின் இவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பினர்.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'சுற்றுலா தலங்களின் மகத்துவத்தை, பொதுமக்கள் புரிந்து கொண்டு துாய்மையை கடைபிடிக்க வேண்டும். இனிமேல் இது போன்று நடந்து கொள்ளும் சுற்றுலா பயணியரையே, சுத்தம் செய்ய வைப்போம்' என்றனர்.

