ADDED : ஆக 13, 2024 02:21 AM

கொச்சி, கேரளாவின் கொச்சியில் வசித்து வந்த யூத இனத்தைச் சேர்ந்த கடைசி பெண், வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.
கேரளாவில், 2,000 ஆண்டுகளுக்கு முன் யூதர்கள் பெரும் அளவில் குடியேறினர். பல நுாறு ஆண்டுகளுக்கு முன் வரை கணிசமான எண்ணிக்கையில் யூதர்கள் அங்கு வசித்தனர்.
அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று குடியேற துவங்கியதும் யூதர்களின் எண்ணிக்கை கேரளாவில் குறைய துவங்கியது.
குறிப்பாக கொச்சியில் பெரிய எண்ணிக்கையில் யூதர்கள் வசித்து வந்தனர். கொச்சியின் மட்டாஞ்சேரி என்ற இடத்தில், யூதர்களுக்கான வழிபாட்டு தலமான பர்தேசி ஜெப ஆலயம், 1568ல் கட்டப்பட்டது.
காமன்வெல்த் நாடுகளில் இயங்கி வரும் மிகப் பழமையான யூத வழிபாட்டு தலங்களில் ஒன்றாக இது உள்ளது.
மட்டாஞ்சேரியில் யூத இனத்தைச் சேர்ந்த குயீன் ஹலேகுவா, 89, அவரது உறவினர் கீத் ஹலேகுவா, 65, ஆகியோர் மட்டுமே வசித்து வந்தனர்.
கொச்சியில் வசித்து வந்த யூத இனத்தின் கடைசி பெண்ணான குயீன் ஹலேகுவா, வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு யூத முறைப்படி அங்குள்ள யூத கல்லறையில் நடந்தது. அமெரிக்காவில் வசிக்கும் குயீன் ஹலேகுவாவின் மகன் மற்றும் மகள் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
யூதர்கள் வழக்கப்படி இறுதிச் சடங்கில், 10 யூத ஆண்கள் பங்கேற்க வேண்டும் என்பது மரபு. எனவே, கொச்சிக்கு சுற்றுலா பயணியராக வந்திருந்த சில யூதர்களும் குயீன் ஹலேகுவாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
குயீன் ஹலேகுவாவின் தந்தை கோடர், கொச்சியில் மின்சார வினியோகத்தை முதன்முதலில் செயல்படுத்தியவர். கொச்சியில் படகு போக்குவரத்து மற்றும் முதல் பல்பொருள் அங்காடி ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.

