ADDED : மே 23, 2024 10:02 PM
கோலார்: 'கோலார் மாவட்டத்தில் 106 ஏரிகளின் ஆக்கிரமிப்புகள் ஜூன் 10க்குள் அகற்றப்பட வேண்டும்,'' என்று மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா தெரிவித்துள்ளார்.
கோலார் மாவட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. இதில் பல ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
கோலார் மாவட்ட ஏரிகளின் விபரங்கள் குறித்து அதிகாரிகளுடன், மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. சிறிய நீர் பாசனத்துறை கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இம்மாவட்டத்தில் மாலுாரில் தான் அதிக ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியானது.
கோலார் மாவட்ட ஏரிகளில் 934 ஏக்கர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு பட்டியலில் உள்ள ஏரி நிலங்களை 15 நாட்களுக்குள் கையகப்படுத்த வேண்டும்.
பல ஏரி நிலங்களுக்கு முறைகேடாக பட்டா பதிவு செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கவயலில் பாரண்டஹள்ளி, சொர்ணகுப்பம் ஏரி, மஸ்கம் கவுடனகெரே ஏரி, உரிகம் பேட்டை ஏரி, ராம் சாகர், பேத்தமங்களா ஆகிய ஏரிகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்து உள்ளது.
கோலார் மாவட்டத்தில், தாலுகா வாரியாக ஆக்கிரமிப்பு விபரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோலார் -19, மாலுார் -35, முல்பாகல் 20, பங்கார்பேட்டை -14, தங்கவயல் -12, சீனிவாசப்பூர் -6 என 106 ஏரிகள் ஆக்கிரமிப்புகள், ஜூன் 10 ம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும் என்று கலெக்டர் அக்ரம் பாஷா தெரிவித்தார்.