கலெக்டர்கள் ஆவணம் வரவில்லை மணல் குவாரி வழக்கில் ஈ.டி., முறையீடு
கலெக்டர்கள் ஆவணம் வரவில்லை மணல் குவாரி வழக்கில் ஈ.டி., முறையீடு
ADDED : ஆக 07, 2024 01:12 AM
புதுடில்லி,:சட்டவிரோத மணல் குவாரி வழக்கில், தமிழகத்தை சேர்ந்த நான்கு மாவட்ட கலெக்டர்கள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை என, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டது.
தமிழகத்தில், சட்டவிரோதமாக குவாரிகளில் மணல் அள்ளப்படும் விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்ற மோசடி குறித்து அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பாக, வேலுார், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலுார் மாவட்ட கலெக்டர்கள் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை, கடந்த பிப்.,யில் சம்மன் அனுப்பியது. சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களும் தமிழக அரசும் இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சம்மனுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'நாங்கள் கேட்ட ஆவணங்களை, தமிழகத்தை சேர்ந்த நான்கு மாவட்ட கலெக்டர்கள் இன்னும் முழுமையாக சமர்ப்பிக்கவில்லை' என, அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ''தங்களிடம் சமர்ப்பிக்கப்படாத ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்,'' என, தெரிவித்தார்.
அமலாக்கத்துறை அவகாசம் கோரியதை அடுத்து விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.