பொது சிவில் சட்ட வரைவு மசோதா ஆராய மே.வங்கத்தில் குழு அமைப்பு
பொது சிவில் சட்ட வரைவு மசோதா ஆராய மே.வங்கத்தில் குழு அமைப்பு
ADDED : ஜூலை 11, 2026 06:41 PM
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், யு.சி.சி., எனப்படும், பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை ஆராய, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மதமதம், நம்பிக்கை அல்லது சமூகம் ஆகியவற்றை கடந்து, மாநில மக்களின் தனிப்பட்ட சிவில் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் ஒரு விரிவான சட்டக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை இம்மாநில அரசு தயாரித்துள்ளது.
இதை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில், மேகாலயா முன்னாள் கவர்னர் ததாகதா ராய், உள்ளுறை கமிஷனர் துஷ்யந்த் நாரியாலா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சத்ருக்னா சிங், உள்துறை மற்றும் மலைப்பகுதி விவகாரங்கள் துறையின் முதன்மை செயலர் சங்கமித்ரா கோஷ், கல்வியாளர் ரத்னா பட்டாச்சார்யா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2ல் நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை முழுமையாக ஆய்வு செய்வதற்கும், மறுபரிசீலனை செய்வதற்கும் இக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு வரைவு மசோதாவை விரிவாக ஆய்வு செய்து, தன் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். அதன் அடிப்படையில் வரைவு மசோதாவில் சில திருத்தங்களை அரசு மேற்கொள்ளும்’ என்றார்.
கடந்த 2014க்கு பின், பா.ஜ., ஆளும் உத்தரகண்ட், குஜராத், அசாம் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்றுள்ளன. இந்த வரிசையில் இச்சட்டத்தை ஏற்கும் நான்காவது மாநிலமாக மேற்கு வங்கம் இணைய உள்ளது.
