புனே கார் விபத்து சிறுவனுக்கு ஜாமின் வழங்கியோரை விசாரிக்க குழு
புனே கார் விபத்து சிறுவனுக்கு ஜாமின் வழங்கியோரை விசாரிக்க குழு
ADDED : மே 30, 2024 01:14 AM
புனே, மஹாராஷ்டிராவில், குடிபோதையில் காரை மோதி இருவர் உயிரிழக்க காரணமான சிறுவனுக்கு, 15 மணி நேரத்தில் ஜாமின் வழங்கிய சிறார் நீதி வாரிய உறுப்பினர்களின் செயல்பாடுகளை விசாரிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் புனேயில், கடந்த 19ம் தேதி அதிகாலை, 'பார்ஷ்' சொகுசு கார் மோதி ஐ.டி., நிறுவன ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
விசாரணையில், காரை ஓட்டியது ரியல் எஸ்டேட் அதிபர் விஷால் அகர்வாலின், 17 வயது மகன் வேதாந்த் என்பதும், அவர் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிந்தது. அவருடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
மிரட்டல்
அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், அச்சிறுவனை சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 300 வார்த்தைகளில் சாலை விபத்து தொடர்பான கட்டுரை எழுத வேண்டும் என்பது உட்பட, பல்வேறு நிபந்தனைகளுடன் சிறுவனுக்கு ஜாமின் வழங்கினார்.
விபத்து நடந்து 15 மணி நேரத்தில், ஜாமின் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் போலீசார் மேல்முறையீடு செய்ததில், அச்சிறுவனை சிறார் சீர்திருத்த இல்லத்தில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, சிறுவனின் தந்தை மற்றும் சிறுவர்களுக்கு மது வழங்கிய இரண்டு மதுபான விடுதிகளின் உரிமையாளர்கள் உட்பட, ஐந்து பேரை போலீசார் கடந்த 21ல் கைது செய்தனர்.
இதற்கிடையே, காரை ஓட்டியதாக போலீசாரிடம் ஒப்புக்கொள்ளும்படி, தங்கள் வீட்டு கார் டிரைவரை மிரட்டிய வழக்கில் அச்சிறுவனின் தாத்தாவையும் சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.
வழக்கு விசாரணையின் போது, விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரியை குப்பை தொட்டியில் வீசி விட்டு, வேறு ஒருவரின் ரத்த மாதிரியை சோதனை செய்து அறிக்கையை மாற்றி, மோசடியில் ஈடுபட்ட இரண்டு அரசு டாக்டர்களையும் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
குழு நியமனம்
இவ்விவகாரம் தொடர்பாக மூன்று பேர் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், சிறுவனுக்கு ஜாமின் வழங்கிய சிறார் நீதி வாரியத்தின் உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும், விசாரணை நடத்த ஐந்து பேர் அடங்கிய குழுவை மாநில அரசு நியமித்து உள்ளது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரி தலைமையிலான அக்குழு, வாரிய உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றி ஆராய்ந்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.