டிக்கெட் தவறவிட்ட பெண்ணை இறக்கிவிட்ட நடத்துனர் மீது புகார்
டிக்கெட் தவறவிட்ட பெண்ணை இறக்கிவிட்ட நடத்துனர் மீது புகார்
ADDED : ஜூன் 16, 2024 07:24 AM
ஹொசதுர்கா: டிக்கெட்டை எதிர்பாராமல் தவறவிட்ட தன்னை கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் இருந்து கீழே இறக்கிய நடத்துனர் மீது பெண் ஒருவர் புகார் செய்துள்ளார்.
சித்ரதுர்கா, ஹொசதுர்காவின் சாலகட்டே கிராமத்தில் சமுதாய சுகாதார அதிகாரியாக பணியாற்றுபவர் சைத்ரா. இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு, மாலையில் சாலகட்டே கேட்டில் இருந்து, ஹொசதுர்காவின் ஸ்ரீராம்புராவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் பயணம் செய்தார்.
ஹுளியார் பஸ் நிலையம் அருகில், இவரது கையில் இருந்த டிக்கெட், எதிர்பாராமல் பஸ்சில் இருந்து வெளியே விழுந்தது. அதற்குள் பஸ், ஹுளியாருவை கடந்து வந்துவிட்டது.
இதை நடத்துனரிடம் கூறி, மற்றொரு டிக்கெட் தரும்படி கேட்டார். நடத்துனர் மறுத்தார்.
அப்போது சைத்ரா, 'நீங்கள் 'சக்தி' திட்டத்தின், இலவச டிக்கெட் தர வேண்டாம். கட்டணம் செலுத்துகிறேன். டிக்கெட் தாருங்கள்' என்றார்.
கோபமடைந்த நடத்துனர், வாய்க்கு வந்தபடி திட்டி, ஹுளியார் புறநகரில் சைத்ராவை பஸ்சில் இருந்து கீழே இறக்கிவிட்டுச் சென்றார்.
அதன்பின் தனியார் பஸ்சில், அவர் ஹொசதுர்காவுக்கு வந்தார். நடத்துனரின் செயல் குறித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது.