தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கண்டனம்!

கண்டனம்!

கண்டனம்!


ADDED : ஜூலை 14, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரான் துணை துாதரை நேரில் அழைத்து மத்திய அரசு... இந்தியர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை

புதுடில்லி: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், ஈரான் துணை துாதர் முகமது ஜாவத் ஹொசைனியை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, ‘இத்தகைய செயல்கள், ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன’ என, குறிப்பிட்டுள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் – அமெரிக்கா இடையே, பிப்., 28ல் தொடங்கிய மோதல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்தம் ஒப்பந்தமும் கையெழுத்தானது. எனினும், ஒப்பந்தத்தை மீறி இரு நாடுகளும் மீண்டும் சண்டையிட்டு வருகின்றன.

இதனால் கடுப்பான ஈரான், தன் ஒரே ஆயுதமான, உலகின், 20 சதவீத சரக்கு போக்குவரத்து கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளது. எதிர்முனையில் அமெரிக்காவும் முற்றுகையிட்டு உள்ளதால், மேற்காசிய பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

இந்த சூழலில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் தேசியக்கொடி ஏந்திய, ‘எம்.டி.அல் பஹியா, எம்.டி.மொம்பாசா’ ஆகிய கப்பல்கள் நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்றன. இந்த இரு கப்பல்களிலும் மொத்தம், 46 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில், 30 பேர் இந்தியர்கள்.

அப்போது, ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலில், எம்.டி.அல் பஹியா கப்பலில் இருந்த, 12 இந்தியர்களில் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் காயமடைந்தார். அதே போல, ‘எம்.டி.மொம்பாசா’ கப்பலில் இருந்த, 18 இந்தியர்களில் ஒன்பது பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று, இந்த தாக்குதல் தொடர்பாக டில்லியில் உள்ள ஈரான் துாதரகத்தின் துணை துாதர் முகமது ஜாவத் ஹொசைனியை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனத்தை தெரிவித்தது.

இது குறித்து, நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

மேற்காசிய பிராந்தியத்தில் மீண்டும் அதிகரித்து வரும் மோதல்கள் கவலை அளிக்கின்றன. பிராந்திய அமைதி, பாதுகாப்பிற்காக வன்முறையை உடனடியாக கைவிட்டு, பேச்சு மற்றும் துாதரக ரீதியில் தீர்வு காண அமெரிக்கா – ஈரான் முன்வர வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, ஹார்முஸ் ஜலசந்தியில் கடல்சார் வணிகம் மற்றும் போக்குவரத்து தடையின்றி நடப்பதை உறுதி செய்ய, வணிகக் கப்பல்கள் மற்றும் உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்கலை நிறுத்த வேண்டும்.

ஐக்கிய அரபு எமிரேட்சின் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய செயல்கள், உலகின் முக்கிய கடல்சார் வணிகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

தாக்குதலில் உயிரிழந்த இந்தியருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள நம் துாதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பாதிக்கப்பட்ட இந்திய பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நம் துாதரகம் செய்து வருகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையே போர் தொடங்கியதில் இருந்து, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், அந்நாடுகளுக்கு இடையிலான மோதலில் சிக்கி, இதுவரை, ஒன்பது இந்திய கப்பல் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

‘எச்சரிக்கையை மீறியதால் தாக்கினோம்’ தாக்குதல் தொடர்பக, ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கை: ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் அளித்த தொடர் எச்சரிக்கைகளை ஐக்கிய அரபு எமிரேட்சின் இரண்டு வணிகக் கப்பல்களும் வேண்டுமென்றே புறக்கணித்தன. தாங்கள் செல்லும் பாதையை மறைப்பதற்காக இரு கப்பல்களும் தங்களின், ‘நேவிகேஷன் மற்றும் ‘டிராக்கிங்’ கருவிகளை அணைத்து விட்டு, ஆபத்தான கண்ணிவெடிகள் நிறைந்த பகுதிக்குள் நுழைந்து கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தின. எங்கள் மக்களின் உரிமைகளை பறிக்க முயலும் அமெரிக்க ராணுவத்துடன் கூட்டு வைக்கும் எந்தவொரு வணிகக் கப்பலும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



‘ஹார்முஸ் ஜலசந்தியில் 7 இந்திய கப்பலகள்’ மத்திய அரசு அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்படுவதற்கு முன்னதாகவே, ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் நம் தேசியக்கொடி ஏந்திய ஏழு கப்பல்கள் இருந்தன. தற்போதைய சூழலில், பதற்றம் தணியும் வரை அந்த கப்பல்கள் அங்கிருந்து வெளியேற வாய்ப்பில்லை. அந்த கப்பல்களில், 148 பணியாளர்கள் உள்ளனர். தற்போதைக்கு அங்கிருந்து வெளியேறும் திட்டம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us