உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம்
உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம்
ADDED : ஆக 08, 2024 03:06 AM

புதுடில்லி : வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், அவர் கூறியவற்றை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.
நிலத்தகராறு தொடர்பான ஒரு பிரச்னையில், அவதுாறு வழக்கு தொடரப்பட்டது. இதில் நடவடிக்கை எடுக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு, உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்த, மே, 3ம் தேதி தடை விதித்திருந்தது.
அவதுாறு வழக்கு
இது தொடர்பான வழக்கு, கடந்த ஜூலை, 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற நீதிபதி ராஜ்பிர் ஷெராவத், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து விமர்சித்தார்.
இந்த வழக்கின் விசாரணை, நீதிமன்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பானது.
தன் உத்தரவை அறிவித்த பின், 'உச்ச நீதிமன்றம் தன்னை மிகவும் பெரியதாக எண்ணிக் கொள்கிறது. அதே நேரத்தில் உயர் நீதிமன்றங்களை குறைவாக மதிப்பிடுகிறது' என, கருத்து கூறியிருந்தார்.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து, நீதிபதி மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு இதை விசாரித்தது.
அமர்வு கூறியுள்ளதாவது:
இந்த விஷயத்தில், உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வின் கருத்துகள் தேவையில்லாத விமர்சனம். இது இரண்டு நீதிமன்றங்களின் கண்ணியத்தையும் குறைப்பதாக அமைந்துள்ளது.
நீதியின் முன், அனைத்து நீதிமன்றங்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன. நீங்கள் உயர்ந்தவர், நான் குறைந்தவர் என்பது நீதிமன்றங்களுக்கும், நீதிக்கும் கிடையாது.
நீதித்துறையில் சில படிகள் உள்ளன. அதன்படி, உயர் நீதிமன்றத்துக்கு அடுத்த மேல் நிலையில் உச்ச நீதிமன்றம் உள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுவது என்பது, உங்களுக்கான வாய்ப்பு அல்ல; அது அரசியலமைப்பு சட்டக் கடமையாகும்.
நடவடிக்கை இல்லை
ஒரு தீர்ப்பின் மீது, அதில் தொடர்புடையவர்களுக்கு அதிருப்தி இருக்கலாம். ஆனால், நீதிமன்றங்களுக்கோ, நீதிபதிகளுக்கோ இருக்கக் கூடாது. தனி நீதிபதியின் கருத்துக்கள் வருத்தம் அளிப்பதாக உள்ளது.
நீதித்துறையின் ஒழுக்கத்தை, கண்ணியத்தை அனைவரும் காப்பாற்ற வேண்டும். இதுபோன்று தேவையில்லாத கருத்துகளை, விமர்சனங்களை தெரிவிக்கக் கூடாது.
இந்த விஷயத்தில், தனி நீதிபதி நடத்திய விசாரணையின் நேரடி ஒளிபரப்பின் வீடியோக்கள் பரவி வருகின்றன.
அவர் கூறிய வார்த்தைகள் நீக்கப்படுகின்றன. இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
அவர் இந்தக் கருத்தை தன் உத்தரவில் எழுத்துப்பூர்வமாக குறிப்பிடவில்லை. வாய்வழியாக தெரிவித்துள்ளார். அதனால், அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும், அவதுாறு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதே நேரத்தில், இது அனைத்து நீதிபதிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்று மற்றொரு நீதிமன்றத்தின் உத்தரவுகள் குறித்து விமர்சிக்கக் கூடாது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.