ADDED : ஜூலை 16, 2024 04:01 AM

பெங்களூரு : மறைந்த பிரமுகர்களுக்கு கர்நாடக சட்டசபை, மேலவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கர்நாடகாவில் கடைசியாக, கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. விதிமுறைப்படி ஆறு மாதங்களுக்குள் அடுத்த கூட்டத்தொடர் நடத்த வேண்டும். அதன்படி, கர்நாடக மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை, சபாநாயகர் காதர் கொண்டு வந்தார்.
முன்னாள் துணை சபாநாயகர் நாகம்மா, முன்னாள் மத்திய அமைச்சர் சீனிவாச பிரசாத், முன்னாள் எம்.பி., மூடலகிரியப்பா, முன்னாள் அமைச்சர் கேசவமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வசந்த பங்கேரா, பாட்டீல் பசனகவுடா குரனகவுடா, நாகரெட்டி பாட்டீல், ரமேஷ்குமார் பாண்டே, வாசு, இயக்குனர் துவாரகீஷ், இலக்கியவாதி கமலா ஹம்பனா, நடிகை அபர்ணா உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ.,வின் விஜயேந்திரா உட்பட பலர் இரங்கல் தீர்மானத்தின் மீது பேசினர். இறுதியில், மறைந்தவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இதுபோன்று, மேலவையிலும் இரங்கல் தீர்மானத்தை, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கொண்டு வந்தார். முன்னாள் எம்.எல்.சி.,க்கள் சுனந்தா பாட்டீல், சின்னசாமி, இக்பால் அகமது சரடகி, பானுபிரகாஷ் உட்பட பலருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேலவையிலும் இறுதியில் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், அவை ஒத்திவைக்கப்பட்டது.

