காங்., ஊழல் குறித்த பென் டிரைவ்; முதல்வருக்கு குமாரசாமி கேள்வி
காங்., ஊழல் குறித்த பென் டிரைவ்; முதல்வருக்கு குமாரசாமி கேள்வி
ADDED : மே 17, 2024 05:53 AM

மைசூரு : ''மாநில காங்கிரஸ் அரசின் ஊழல் குறித்து எனது பென் டிரைவ் கொடுக்க தயாராக உள்ளேன். அதன் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் சித்தராமையாவுக்கு தைரியம் உள்ளதா,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இடமாற்றத்துக்கு பணம் கொடுக்க முடியாமல் அதிகாரிகள் தவித்துள்ளனர். அந்த பணத்தை கேட்டு வற்புறுத்தியது யார் என்ற விபரங்களை தருகிறேன். அதன் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் சித்தராமையாவுக்கு தைரியம் உள்ளதா. மாநில காங்கிரஸ் அரசின் ஊழல் குறித்து எனது பென் டிரைவ் கொடுக்க தயாராக உள்ளேன்.
எம்.பி., பிரஜ்வல் இங்கு இருந்தபோது என்னை தொடர்பு கொள்ளாதவர், வெளிநாட்டில் இருக்கும் போது மட்டும் என்னை தொடர்பு கொள்வாரா. பிரஜ்வல் மீதான வழக்கால், ம.ஜ.த.,வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. அரசு உண்மையை வெளி கொண்டு வரட்டும். ஆனால் அவர்களுக்கு அது தேவையில்லை. அவர்களுக்கு ம.ஜ.த.,வை ஒழித்து கட்ட வேண்டும்.
பா.ஜ., பிரமுகர் தேவராஜ் கவுடா மீது பொய்யான பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து ஒரு மாதமாகிறது. மூன்று நாட்களுக்கு முன் தன்னை பயன்படுத்தி 'ஹனிடிராப்' செய்ய சிலர் முயற்சிப்பதாக புகார் அளித்துள்ளனர். அவர் வைத்திருக்கும் 'ஆடியோ' உரையாடலுக்காக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் விவகாரத்தில் யார் திமிங்கிலம் என்பதை விசாரித்தால், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அருகில் யார் உள்ளனர் என்பது பத்து நிமிடத்தில் தெரிந்துவிடும். இவ்வழக்கு முறையாக விசாரணை நடக்கவில்லை. சிறப்பு குழு அதிகாரிகளின் அறிக்கைகள், உள்துறை அமைச்சருக்கு செல்வதற்கு முன், மாண்டியாவில் உள்ள எம்.எல்.ஏ.,வுக்கு செல்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
***

