தாமரைக்கு ஓட்டு போடுவதாக கூறிய மூதாட்டிக்கு காங்., வேட்பாளர் 'பளார்'
தாமரைக்கு ஓட்டு போடுவதாக கூறிய மூதாட்டிக்கு காங்., வேட்பாளர் 'பளார்'
ADDED : மே 04, 2024 11:47 PM

ஹைதராபாத்: தெலுங்கானா காங்கிரஸ் வேட்பாளர் ஜீவன் ரெட்டி ஓட்டு சேகரிக்க சென்ற இடத்தில், மூதாட்டி ஒருவர் 'தாமரைக்கு தான் இந்த முறை ஓட்டு' என கூறியதால், ஆத்திரமடைந்த அவர், மூதாட்டியின் கன்னத்தில் அறைந்தார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு வரும் 13ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், நிஜாமாபாத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜீவன் ரெட்டி நேற்று அத்தொகுதிக்கு உட்பட்ட அர்மூர் பகுதியில் கட்சியினருடன் இணைந்து பிரசாரம் செய்தார். 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டார்.
அப்போது ஒரு மூதாட்டி இந்த முறை தாமரை சின்னத்துக்கு ஓட்டு போட இருப்பதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டதாகவும், ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
இதை கேட்டு ஆத்தி ரமடைந்த அவர், மூதாட்டியின் கன்னத்தில் அறைந்து, 'கை சின்னத்துக்கு ஓட்டுப் போடு' என அதட்டினார். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி காங்கிரஸ் வேட்பாளருக்கு சங்கடத்தை உருவாக்கியுள்ளது.