ADDED : ஜூலை 12, 2024 06:51 AM

ஹாசன்: ''கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றனர். இதற்காக பொய் குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தி வருகின்றனர்,'' என விவசாய துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.
ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் முடிவுகளால் பா.ஜ.,வினர் ஆதங்கம் அடைந்துள்ளனர். தற்போது மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றனர். ஆட்சியை கவிழ்த்து விடுவோம் என்ற நினைப்பில் உள்ளனர். இதற்காக பொய் குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தி வருகின்றனர்.
ஒரு எதிர்க்கட்சி தலைவரே, ஆட்சியை கவிழ்ப்போம் என்று கூறுகிறார். இப்படி சொல்வது, ஜனநாயக நடைமுறையில் பெரிய குற்றம்.
'மூடா' சட்ட விதிமுறைப்படி தான், முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு, வீட்டு மனை ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும், அவரது மச்சான், அக்காவுக்கு தானமாக வழங்கி உள்ளார்.
ஆனாலும், முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், விசாரணை நடத்தப்படுகிறது. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு விஷயத்தில் அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கை வந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.