ADDED : ஜூலை 02, 2024 06:46 AM

மைசூரு: ''எம்.யு.டி.ஏ.,வில் நடந்துள்ளது முறைகேடு தொடர்பாக விசாரிக்க, இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது,'' என, நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார்.
எம்.யு.டி.ஏ., எனும் மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தில், 5,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதில், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதுதொடர்பாக மைசூரில் நேற்று நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் அளித்த பேட்டி:
எம்.யு.டி.ஏ.,வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, வெங்கடாசலபதி, பிரபுலிங்க கவுலிகட்டி ஆகிய இரு ஐ.ஏ.ஸ்., அதிகாரிகள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் விசாரணை நடத்தி, நான்கு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிப்பர்.
இந்த முறைகேடு விஷயம் வெளியானவுடன், எம்.யு.டி.ஏ., கமிஷனர் தினேஷ் குமாருடன், செயலர், உதவி செயல் இன்ஜியர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அடுத்த ஒரு மாதத்திற்கு எம்.யு.டி.ஏ., தொடர்பான எந்த கூட்டமும் நடக்காது. முன்னதாக எம்.யு.டி.ஏ., சார்பில் ஒதுக்கப்பட்ட அனைத்து மனைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன.
எங்களிடம் 'பென்டிரைவ்' கலாசாரம் இல்லை. அது பற்றி எனக்கு தெரியாது. விஸ்வநாத், தனக்கு மனை ஒதுக்க, என்னிடம் வந்ததை அவர் மறக்கக் கூடாது.
போகிறபோக்கில் ஒருவர் மீது குற்றம் சாட்டக் கூடாது. 2,500 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டிய கவுட்டில் ரகு, மருத்துவமனை கட்ட ஒரு ஏக்கர் நிலம் பெற்று, பள்ளி கட்டி உள்ளார்.
அத்துடன், முதல்வர் சித்தராமையாவின் மனைவி, சட்டபூர்வமாகவே மனை பெற்றுள்ளார். இல்லையென்றால், அதுவும் வாபஸ் பெறப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.
2_DMR_0008
எம்.யு.டி.ஏ.,வில் முறைகேடு தொடர்பாக, நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் (இடது) விளக்கினார். இடம்: மைசூரு.