புதிதாக 5 டிப்போ அமைக்கும் பணி: மெட்ரோ நிறுவனம் தீவிரம்
புதிதாக 5 டிப்போ அமைக்கும் பணி: மெட்ரோ நிறுவனம் தீவிரம்
ADDED : ஆக 08, 2024 05:53 AM

பெங்களூரு: பெங்களூரில் ஐந்து புதிய டிப்போக்கள் அமைக்கும் பணியை, மெட்ரோ நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது.
பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில்கள், பெங்களூரு மக்களின் உயிர் நாடியாக உள்ளது. தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கின்றனர்.
நடப்பாண்டு மேலும் இரண்டு பாதைகளில், மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவக்க தயாராகி வருகிறோம். ஏற்கனவே சோதனை ஓட்டம் துவங்கியுள்ளது. அடுத்த 2041ல் பயணியர் எண்ணிக்கையை மனதில் கொண்டு, தொலைநோக்கு பார்வையுடன் மெட்ரோ நிறுவனம் புதுப்புது திட்டங்கள் வகுத்துள்ளது.
பெங்களூரில் புதிதாக ஐந்து டிப்போக்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது நகரில் மூன்று மெட்ரோ டிப்போக்கள் உள்ளன. ரயில்களின் நிர்வகிப்பு உட்பட, தொழில்நுட்ப பணிகளுக்கு டிப்போ பயன்படுகிறது.
வரும் நாட்களில் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், புதிதாக ஐந்து டிப்போக்கள் கட்டப்படுகின்றன. தற்போது பையப்பனஹள்ளியில் உள்ள டிப்போ மேம்படுத்தப்படுகிறது. இரண்டு பாதையின் ரயில்களை, நிர்வகிக்கும் வசதிகள் செய்ய வேண்டும்.
எனவே 249.19 கோடி ரூபாய் செலவில், மாற்றி கட்டப்படுகிறது. வெளி வட்ட சாலையில் இயங்கும் 16 ரயில்கள், விமான நிலைய பாதையில் இயங்கும் 21 ரயில்கள், இந்த டிப்போவில் நிர்வகிக்கப்படும்.
வரும் 2028 வேளையில், மெட்ரோ ரயில்கள் எண்ணிக்கை 159 ஆக அதிகரிக்கும். தற்போதுள்ள டிப்போக்களில், இந்த அளவு ரயில்களை நிர்வகிப்பது கஷ்டம். இதற்கு தீர்வு காண, புதிய டிப்போக்கள் கட்டப்படுகின்றன. ஷெட்டிகெரே டிப்போவில், 182.33 கோடி ரூபாய் செலவில் டிப்போ கட்டப்படுகிறது. 49 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இங்கு 21 ரயில்கள் நிர்வகிக்கப்படும்.
கொத்தனுாரில் கட்டப்படும் டிப்போ பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளன. அஞ்சனாபுராவில் 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. செல்லகட்டாவில், 499 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் டிப்போ பணிகள், 99 சதவீதம் முடிந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.