வயநாட்டின் மறக்க முடியாத நாளின் சில நினைவுகள்: சசி தரூர் பதிவால் சர்ச்சை
வயநாட்டின் மறக்க முடியாத நாளின் சில நினைவுகள்: சசி தரூர் பதிவால் சர்ச்சை
ADDED : ஆக 05, 2024 01:32 AM

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருவனந்தபுரம் தொகுதி காங்., - எம்.பி., சசி தரூர், சமீபத்தில் நிவாரண உதவிகள் வழங்கினார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை, சமூக வலைதளத்தில் பகிர்ந்த அவர், 'வயநாட்டில் மறக்க முடியாத நாளின் சில நினைவுகள்' என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 'உயிரிழப்புகளும், சோகங்களும் நிலவுகிற பகுதியில், மறக்க முடியாத நினைவுகள் என குறிப்பிடுவது கண்டிக்கத்தக்கது' என, பயனர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக, காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் நேற்று தெரிவித்தார்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எஞ்சியிருக்கும் வீடுகளில், கொள்ளை முயற்சி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மீட்புப் பணியாளர்கள் என்ற போர்வையில், திருடர்கள் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில சமூக ஊடக நிறுவனங்கள் வீடியோ எடுக்கின்றன. இது, மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.