ADDED : ஜூலை 06, 2024 06:26 AM

பெங்களூரு: 'சொத்து வரி உயர்த்தப்படாது. சொத்து வரி செலுத்தும் போது அளிக்கப்படும் தள்ளுபடி சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது,' என பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து, மாநகராட்சி வருவாய்ப் பிரிவு கமிஷனர் மணீஷ் மவுத்கில் கூறியதாவது:
கட்டடம் உட்பட, மற்ற சொத்து வரியை அதிகரிக்க, மாநகராட்சி ஆலோசிப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் சொத்து வரி உயர்த்துவது குறித்து, மாநகராட்சி ஆலோசிக்கவில்லை. வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.
கர்நாடக நகர உள்ளாட்சிகளில், ஏப்ரலில் வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி சலுகை அளிக்கப்படும். 2024 - 25ம் ஆண்டில் சொத்து வரி செலுத்தும் தள்ளுபடி சலுகையை ஜூலை 31 வரை நீட்டிக்கும்படி, உள்ளாட்சி இயக்குனரகம், அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த வேண்டுகோளை ஏற்று கொண்ட அரசு, சொத்து வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் நோக்கில், 5 சதவீதம் தள்ளுபடி சலுகையை, ஜூலை 31 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.