'மூடா'விற்கு முதல்வர் மனைவி எழுதிய கடிதத்தில் திருத்தம்?
'மூடா'விற்கு முதல்வர் மனைவி எழுதிய கடிதத்தில் திருத்தம்?
ADDED : ஆக 22, 2024 04:19 AM
மைசூரு: 'மூடா'விற்கு முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதி எழுதிய கடிதத்தில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி. இவருக்கு சொந்தமாக மைசூரு கெசரே கிராமத்தில் 3.16 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை தேவனுார் லே - அவுட் அமைக்க, 'மூடா' கையகப்படுத்தி இருந்தது.
இந்த நிலத்திற்கு பதிலாக, மைசூரு டவுன் விஜயநகர் பகுதியில், பார்வதிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டன.
முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, முக்கியமான இடத்தில் மனைவிக்கு மனைகள் வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முதல்வரிடம் விசாரிக்க, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் அனுமதி அளித்துள்ளார்.
இந்நிலையில் முதல்வர் மனைவி பார்வதி, மூடாவுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் நேற்று வெளியானது.
அந்த கடிதத்தில் சில வரிகள் மீது, ஒயிட்னரை பயன்படுத்தி கோடு போடப்பட்டு, அதன் மேல், 'டிக்' அடிக்கப்பட்டு உள்ளது.
ஒயிட்னரால் கோடு போடப்பட்ட இடத்தில், விஜயநகரில் தான் தனக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என, பார்வதி எழுதி இருப்பதாகவும், மூடா முறைகேடு வெளிச்சத்திற்கு வந்த பின், கடிதத்தில் அதிகாரிகளால் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இதை சித்தராமையா மறுத்துள்ளார்.
அந்த கடிதத்தை தனது மனைவி எழுதவில்லை என்றும், அது பொய் கடிதம் என்றும் கூறி இருக்கிறார்.
கெசரே கிராமத்தில் உள்ள பல நிலங்களை கையகப்படுத்தி தான், தேவனுார் லே - அவுட் உருவாக்கப்பட்டு உள்ளது.
லே - அவுட்டை 2001ல் உருவாக்கி உள்ளனர். ஆனால், பார்வதிக்கு தானமாக அவரது சகோதரர் மல்லிகார்ஜுன் அளித்த நிலம், 2004ல் தான் வாங்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
லே - அவுட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில், மல்லிகார்ஜுன் எப்படி நிலம் வாங்கினார் என்ற கேள்வியும், தற்போது எழுந்துள்ளது.