ADDED : ஆக 22, 2024 01:00 AM
ஹாஜிபூர், பீஹாரில் ஹாஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தள பிரமுகரும், முதன்முறை கவுன்சிலருமான பங்கஜ் ராய், நேற்று முன்தினம் இரவு தன் வீட்டு பக்கத்தில் உள்ள துணிக்கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களிடம் இருந்து தப்பித்த பங்கஜ் ராய், வீட்டுக்குள் ஓடினார்.
பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், வீட்டுக்குள் புகுந்து அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை, உறவினர்கள் மருத்துவமனைசேர்த்தனர். எனினும், பங்கஜ் ராய் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், பீஹாரில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து விட்டதாகவும், பங்கஜ் ராயை தே.ஜ., கூட்டணி குண்டர்கள் சுட்டுக் கொன்றதாகவும் குற்றம்சாட்டினார்.