கவுரி லங்கேஷ் கொலை வழக்கு மூவருக்கு ஐகோர்ட் ஜாமின்
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு மூவருக்கு ஐகோர்ட் ஜாமின்
ADDED : ஜூலை 17, 2024 09:27 AM
பெங்களூரு: பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான மூன்று பேருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது.
பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், 55. கடந்த 2017 செப்டம்பர் 5ல், பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரில் உள்ள தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, சிலரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
இவரை, பரசுராம் வாக்மோரே என்பவர் துப்பாக்கியால் சுட்டதும், அவரை பைக்கில் ஏற்றி சென்றதாக கணேஷ் மிஷ்கின் என்பவர் உட்பட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில், 11வது குற்றவாளி மோகன் நாயக்கிற்கு, ஏற்கனவே கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதன் அடிப்படையில், தங்களுக்கும் ஜாமின் வழங்க கோரி, 5வது குற்றவாளி அமித் திக்வேகர், 7வது குற்றவாளி சுரேஷ், 17வது குற்றவாளி நவீன்குமார் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் தனி தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் மீது ஏற்கனவே விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மூன்று பேருக்கும் ஜாமின் வழங்கி, நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, நேற்று உத்தரவிட்டார். மேலும், 'விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்; உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளையும் நீதிபதி விதித்தார்.
முதலாம் குற்றவாளி அமோல் காளே கொடுத்த தகவலின் அடிப்படையில், அமித் திக்வேகர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர், கொலை செய்வதற்கு நிதியுதவி செய்தவர். கொலை செய்ய திட்டமிட்டதில், நவீன்குமாரும் ஒருவர்.
கொலையாளிக்கு, கவுரி லங்கேஷ் வீட்டை அடையாளம் காண்பித்தவர் நவீன் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.