பாலஸ்தீன கொடியுடன் வலம் சிக்கமகளூரில் மூவருக்கு வலை
பாலஸ்தீன கொடியுடன் வலம் சிக்கமகளூரில் மூவருக்கு வலை
ADDED : செப் 15, 2024 11:06 PM

சிக்கமகளூரு: சிக்கமகளூரில் பாலஸ்தீன கொடியுடன் வலம் வந்து அராஜகத்தில் ஈடுபட்ட மூன்று பேரை, சிறப்பு படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சிக்கமகளூரு நகரின் துண்டரமக்கி ஏரிக்கரை சாலையில் இருந்து, ஹனுமந்தப்பா சதுக்கத்தை நோக்கி, நேற்று இரண்டு பைக்குகள் சென்றன. முதல் பைக்கில் ஒருவரும், 2வது பைக்கில் இரண்டு பேரும் அமர்ந்து கொண்டு, பாலஸ்தீன கொடிகளை பிடித்து சென்றுள்ளனர். இதை பார்த்த பஜ்ரங்தள் மற்றும் பா.ஜ., தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிக்கமகளூரு நகர போலீஸ் நிலையம் முன் குவிந்து, பாலஸ்தீன கொடிகளுடன் அராஜகத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைதியை சீர்குலைக்க சிலர் திட்டமிட்டு செய்வதாகவும், நாகமங்களா கலவரத்தை போன்ற நிலைமை, சிக்கமகளூரில் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜ.,வினர் வலியுறுத்தினர். அதிக எண்ணிக்கையில் கூட்டம் சேர்ந்ததால் பதற்றம் நிலவியது. உடனடியாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி, ''பாலஸ்தீன கொடிகளுடன் வலம் வந்தவர்களின் பைக் எண் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை பிடிப்பதற்காக, சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது,'' என தெரிவித்தார்.

