காரில் தீ: ஒருவர் உயிரிழப்பு
பாகல்கோட்டின் இங்கலகி கிராமத்தில், நேற்று மாலை சென்று கொண்டிருந்த காரில், தொழில்நுட்ப கோளாறால் தீப்பிடித்தது. இதில் பயணித்த சங்கனகவுடா, 50, எரிந்து உயிரிழந்தார். அங்கு வந்த தீயணைப்பு படையினர், காரில் தீயை கட்டுப்படுத்தினர்.
மின்னல் தாக்கி விவசாயி பலி
கொப்பால் குஷ்டகியின் ஹிரேமுகர்தினநாளா கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கனகப்பா காட்டாபுரா, 22. இவர் நேற்று மாலை, வயலில் பணியாற்றும் போது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
விருந்து சாப்பிட்டவர்கள் பாதிப்பு
சித்ரதுர்காவின் காலகேரி கிராமத்தில் சன்னருத்ரப்பாவின் மகளுக்கு, திருமணம் நடந்தது. இதையொட்டி நேற்று கிராமத்தினருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் உணவருந்திய 30 பேர் வாந்தி, வயிற்று போக்கால் பாதிப்படைந்து, மருத்துவமனயில் சேர்க்கப்பட்டனர்.
இளம்பெண் தற்கொலை
கலபுரகியின் யல்லாலிங் காலனியில் வசித்த புஷ்பா, 26, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகி வந்தார். இவர் கிரண் என்பவரை காதலித்தார். திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். ஆனால் ஜாதியை காரணம் காண்பித்து, திருமணத்துக்கு கிரணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. மனம் வருந்திய புஷ்பா, நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி
குடகு மடிகேரியின், மூர்னாடு கிராமத்தில் வசித்தவர் ஹாரிஸ், 35. இவர் நேற்று முன் தினம் மாலை, கிரிக்கெட் விளையாட்டு பேனரை, மின் கம்பத்தில் கட்டும் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.