ADDED : மார் 26, 2024 11:28 PM
வாலிபர் தற்கொலை
துமகூரு குனிகல் ஆச்சார்யா காலனியில் வசித்தவர் ரங்கநாத், 21. இவரும் 16 வயது சிறுமியும் காதலித்தனர். நேற்று மாலை குனிகல் அருகே உள்ள ரங்கசாமி மலைக்கு, ரங்கநாத்தும், அவரது காதலியும் சென்றனர். இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக கூறி சென்ற ரங்கநாத், மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த காதலி, காதலன் குடும்பத்திற்கு தகவல் கொடுத்தார். ரங்கநாத் உடல் மீட்கப்பட்டது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
லஞ்ச இடைத்தரகர் கைது
பெங்களூரு ரூரல் தொட்டபல்லாப்பூர் அருகே தொட்டபெலவங்கலாவில் வசிப்பவர் ராமண்ணா. விவசாயி. இவருக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு உரிய வரைபடம் கேட்டு, நில ஆவண இணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் அதிகாரி சார்பில் இடைத்தரகர் சதீஷ், ராமண்ணாவிடம் 80 ஆயிரம் ரூபாய் கேட்டார். இதுபற்றி லோக் ஆயுக்தாவில் ராமண்ணா புகார் செய்தார். நேற்று மாலை சதீஷிடம் லஞ்ச பணம் கொடுக்கப்பட்டது. அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.
திருட்டு வழக்கில் மூவர் கைது
விஜயபுரா, ஜமகண்டி, முதோல் பகுதிகளில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை, முதோல் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சுனில், 31, மோசின், 24, சதாம், 20 என்பது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 15.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 26 பைக்குகள், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 29 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விவசாயி தற்கொலை
தாவணகெரேயின் மாயகொண்டா சிவபுரா கிராமத்தில் வசித்தவர் பீமாநாயக், 38; விவசாயி. மக்கா சோளம் பயிரிட 16 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். வறட்சியால் மக்கா சோள பயிர்கள் கருகியதால், லாபம் பார்க்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்களும் திரும்ப கேட்க ஆரம்பித்தனர். மனம் உடைந்த பீமாநாயக் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
'ஹமாஸ்' ஆதரவு நபர் கைது
மங்களூரின் ஜோகட்டேயில் வசிப்பவர் ஜாகிர், 58. இவர் தனது சமூக வலைதள பக்கத்தில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதுகுறித்து மங்களூரு வடக்கு போலீஸ் நிலைய எஸ்.ஐ., விநாயக்கிற்கு தெரிந்தது. அவர் அளித்த புகாரில், ஜாகிர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது.
ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மிலன், 22, மோகன், 25, தருண், 19. இவர்கள் 3 பேரும் மைசூரின் நஞ்சன்கூட்டில் உள்ள, தொழிற்சாலையில் வேலை செய்தனர். நேற்று மாலை வேலை முடிந்ததும், கொத்தனபுரா கிராமத்தில் ஓடும், கபிலா ஆற்றில் குளிக்க சென்றனர். ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற மோகன், நீச்சல் தெரியாமல் தத்தளித்தார். அவரை காப்பாற்ற மிலனும், தருணும் சென்றனர். ஆனால் அவர்களும் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் மூன்று பேரும், ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
