ADDED : ஏப் 17, 2024 04:45 AM
பைக் திருடிய 3 பேர் கைது
பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் நிலைய ஏ.எஸ்.ஐ., நாகராஜ். கடந்த மாதம் 31ம் தேதி, இவரது பைக் திருட்டு போனது. நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு ரூரல் டாபஸ்பேட் போலீசார், ஒரே பைக்கில் சென்ற, மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் சுகைல், ஆதில், தனுஷ் என்பது தெரிந்தது. இவர்கள் மூன்று பேரும் தேசிய நெடுஞ்சாலைகளில், வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்தது தெரிந்தது. அவர்கள் வந்த பைக், ஏ.எஸ்.ஐ., நாகராஜிடம் இருந்து திருடப்பட்டதும் தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.
பஸ் கவிழ்ந்து 20 பயணியர் காயம்
பெலகாவி கித்துார் திம்மாபூர் கிராமத்தில், நேற்று காலை 'ராஜஹம்சா' அரசு பஸ் சென்றது. பிரேக் பிடிக்காததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, சாலையில் கவிழ்ந்தது. கிராம மக்கள் விரைந்து வந்தனர். பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து, பஸ்சுக்குள் இருந்த 20 பயணியரை மீட்டனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெண்ணிடம் ரூ.88 ஆயிரம் மோசடி
பெங்களூரு பேகூரில் வசிப்பவர் அர்ஷிதா, 30. தனியார் நிறுவன ஊழியர். பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு டிக்கெட் கிடைக்குமா என்று, ஆன்லைனில் தேடிபார்த்தார். அதில் இருந்த ஒரு மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர், 'உங்களுக்கு டிக்கெட் கண்டிப்பாக கிடைக்கும்' என்றார். அந்த நபர் கூறியதால் டிக்கெட்டுக்காக, பல்வேறு தவணைகளில் 88 ஆயிரம் ரூபாயை, அர்ஷிதா கொடுத்துள்ளார். ஆனால் டிக்கெட் கொடுக்காமலும், பணத்தை திரும்ப தராமலும், மர்மநபர் மோசடி செய்தார். பேகூர் போலீசில், அர்ஷிதா புகார் செய்துள்ளார்.
குழந்தை பெற்ற பெண் மரணம்
பெங்களூரு ஆனேக்கல்லில் வசித்தவர் கவிதா, 24. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவிதாவுக்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆனேக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில், பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் கவிதாவுக்கு ரத்தப்போக்கு அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு இறந்தார். டாக்டர் அலட்சியத்தால், கவிதா இறந்து விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
போலீஸ் ஜீப் பல்டி
ராய்ச்சூர் கூடலதின்னி போலீசார், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். மணல் பாரத்துடன் டிராக்டர் வந்தது. டிராக்டரை நிறுத்தும்படி போலீசார் 'சைகை' காட்டினர். ஆனால் டிரைவர் நிற்காமல் சென்றார். இதனால் டிராக்டரை, போலீசார் ஜீப்பில் துரத்தி சென்றனர். டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், பள்ளத்தில் பல்டி அடித்தது. ஜீப்பில் இருந்த மூன்று போலீசார் காயம் அடைந்தனர்.
