ADDED : மே 18, 2024 02:10 AM
சூதாடிய 12 பேர் கைது
மாண்டியா மலவள்ளி கொரேகால், நெல்லுார் கிராமங்களில், காசு வைத்து சூதாடியதாக 12 பேரை, மலவள்ளி ரூரல் போலீசார், நேற்று மதியம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 13,700 ரூபாய் ரொக்கம், பத்து பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடையில் ரூ.1.30 லட்சம் திருட்டு
சிக்கபல்லாப்பூர் சித்தலகட்டா டவுனில் வசிப்பவர் சசிகுமார். உரம், ரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், கடையின் இரும்பு கதவை உடைத்து உள்ளே சென்றனர். கல்லா பெட்டியில் இருந்த 1.30 லட்சத்தை, திருடிவிட்டு தப்பினர்.
பைக் விபத்தில் 2 பேர் பலி
விஜயநகராவின் என்.ஷீரனஹள்ளி கிராமத்தின் நாகராஜ், 25, அடிவெப்பா, 25; நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு, பைக்கில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தனர். கட்டுப்பாட்டை இழந்த பைக், தறிகெட்டு ஓடி பள்ளத்தில் பாய்ந்தது. துாக்கி வீசப்பட்ட இருவரும், தலையில் படுகாயம் அடைந்து இறந்தனர்.
விவசாயி துாக்கிட்டு தற்கொலை
கொப்பால் குகனுார் மண்டலகிரி கிராமத்தில் வசித்தவர் பிரவீன்குமார் ராமப்பா, 28; விவசாயி. பல்வேறு வங்கிகளில் இருந்து 16 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, கடந்த ஆண்டு வீடு கட்டினார். ஆனால் வறட்சியின் காரணமாக விவசாயத்தில், அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டார். நேற்று முன்தினம் இரவு நிலத்தில் உள்ள, மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சந்தன மரம் கடத்திய 2 பேர் கைது
மைசூரு விஜயநகர் பகுதியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று அதிகாலை வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த பைக்கை மறித்தனர். பின்னால் அமர்ந்திருந்தவர் கையில் பெரிய சாக்கு மூட்டை இருந்தது. அதை பிரித்து பார்த்த போது, சந்தன மரக்கட்டைகள் இருந்தது. வனப்பகுதியில் இருந்து வெட்டி கடத்தியதை ஒப்புக்கொண்டனர். இருவரும் கைதாகினர். விசாரணையில் மைசூரு இலவாலாவின் ரவி, ஹேமந்த் என்பவது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 56 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
15 வயது சிறுவன் கொலை
ஆந்திராவின் மந்த்ராலயத்தை சேர்ந்த ஒரு தம்பதி, பெங்களூரு ரூரல் ஆனேக்கல் நெரிகா கிராமத்தில் வசிக்கின்றனர். இவர்களின் மகன் பிரனேஷ், 15. நேற்று முன்தினம் இரவு, இயற்கை உபாதை கழிக்க வீட்டின் அருகே உள்ள, திறந்தவெளி கழிப்பறைக்கு சென்றார். அப்போது பிரனேஷை மர்மநபர்கள் தலையில் கட்டையால் அடித்து கொன்றுவிட்டு தப்பினர். அவரை கொன்றது யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.
காஸ் ஸ்டவ் வெடித்து ஆறு பேர் காயம்
துமகூரு, குனிகல்லின், சந்தை மைதானம் அருகில் வசிப்பவர் ரவிகுமார். இவர் கார பொரி விற்கும் தொழில் செய்கிறார். பொரியை வறுக்கவும், சமையல் செய்யவும் நான்கு கிலோ காஸ் சிலிண்டர் ஸ்டவ் வைத்துள்ளார். நேற்று மாலை இவரது மனைவி ஸ்ருதி, 45, தன் மகள் ஹேமா, 16, வை டியூஷனில் விட புறப்பட்ட போது, காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் இருவரும் காயமடைந்தனர். சத்தம் கேட்டு உதவிக்கு வந்த மஞ்சம்மா, 42, சிவண்ணா, 45, சமீனா, 46, குஷால், 11, ஆகியோரும் காயமடைந்தனர். இவர்கள் ஆறு பேரும் மருத்துவமனையில், சிகிச்சை பெறுகின்றனர்.
மோசடி ஊழியர் கைது
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பெஸ்காம் அலுவலகத்தில், உதவி இன்ஜினியராக வேலை செய்பவர் கங்காதர். இவரது வீடு பீன்யாவில் உள்ளது. வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் தன்னை, போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி உள்ளார். சுற்றுலா தலங்களுக்கு செல்ல, வி.ஐ.பி., பாஸ் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்து உள்ளார். இதுகுறித்து சிலர் அளித்த புகாரில், பீன்யா போலீசார், கங்காதரை நேற்று கைது செய்தனர்.
விபத்தில் 3 பேர் பலி
கொப்பால் தாலுகா ஹொசஹள்ளி கிராமத்தில் நேற்று இரவு 10:00 மணிக்கு, டிராக்டர் மீது தனியார் பஸ் மோதியது. இதில் டிராக்டரில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் பெயர், விபரம் தெரியவில்லை.
