திருட்டில் ஈடுபட்ட டிரைவர் கைது
பெங்களூரு மஹாதேவபுரா போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, திருட்டு வழக்கில் ஆட்டோ டிரைவர் செல்வராஜ், 45 என்பவரை கைது செய்தனர். கடந்த 9ம் தேதி செல்வராஜ் வசிக்கும் வீட்டின் உரிமையாளர், தமிழகம் சென்று இருந்தார். கள்ளச்சாவியை பயன்படுத்தி உரிமையாளர் வீட்டின் கதவை திறந்து நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து 72,000 ரூபாய் ரொக்கம், 78 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மொபைல் திருடிய இருவர் கைது
பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பயணியரிடம் மொபைல் போன்கள் திருடும் இருவரை, பெங்களூரு உப்பார்பேட் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆந்திராவின் கர்னுாலை சேர்ந்த நகுனிகுமார், 28, பரசுராம், 28 என்பது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான 176 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர்
பெங்களூரில் இரவில் தனியாக வாகனங்களில் செல்பவர்களை வழிமறித்து, கத்தி, அரிவாளை காண்பித்து மிரட்டி பணம், நகை, பொருட்களை கொள்ளையடித்த 5 பேரை சந்திரா லே - அவுட் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர்கள் பர்வேஸ், பாரூக், ரகுமான், ஜமிர், அசிம் என்று தெரிந்தது. இவர்களிடம் இருந்து 6.31 லட்சம் ரூபாய் மதிப்பிலான 32 மொபைல் போன்கள் மீட்கப்பட்டது.
மடிக்கணினி திருடியவர் கைது
பெங்களூரு குமாரசாமி லே - அவுட் போலீசார் திருட்டு வழக்கில், ஆந்திராவின் குமார், 45 என்பவரை கைது செய்தனர். ஆண்கள் தங்கும் விடுதிக்கு அறை பார்ப்பது போல சென்று, அங்கிருந்து மடிக்கணினிகள் திருடியது தெரிந்தது. இவரிடம் இருந்து 2.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று மடிக்கணினிகள் மீட்கப்பட்டன.
கொதிகலன் வெடித்து பெண் பலி
பெலகாவி அதானி சிக்கட்டி கிராமத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதிக்கு சொந்தமான ஊறுகாய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று கொதிகலன் வெடித்து சிதறியது. சுனந்தா, 36 என்ற தொழிலாளி, பலத்த தீக்காயம் அடைந்து உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.
தொட்டியில் மூழ்கி சிறுவன் பலி
பெங்களூரு கே.ஆர்.புரம் அய்யப்ப நகரில், நேபாளத்தை சேர்ந்த தம்பதி வசிக்கின்றனர். இவர்களின் ஐந்து வயது மகன் சுபின், 5. நேற்று காலையில் இருந்து அவரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள, தண்ணீர் தொட்டியில் சுபின் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
எஸ்.ஐ.,யை தாக்கியவர் கைது
பெங்களூரு ஆனேக்கல் சந்தாபூரில் வசிப்பவர் ராஜம்மா. காய்கறி கடை நடத்துகிறார். இவருக்கும், பக்கத்து கடையின் மைனா என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. சந்தாபூர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., சிக்கன திம்மய்யா, சந்தைக்கு சென்று இருவரையும், சமாதானம் செய்ய முயன்றார்.அப்போது ராஜம்மாவை, மைனாவின் கணவர் சிவகுமார், 45 அரிவாளால் வெட்ட முயன்றார். சிக்கன திம்மய்யா தடுத்தார். இதனால் அவரை தாக்கினார். சிவகுமார் சந்தாபூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

