ADDED : மார் 14, 2025 12:57 AM
புதுடில்லி :'கிரிப்டோ கரன்சி'யில் பல லட்சம் கோடி ரூபாய் முறைகேடு செய்து அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த குற்றவாளி, கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
ஐரோப்பிய நாடான லிதுவேனியாவை சேர்ந்தவர் அலெக்ஸேஜ் பெசியோகோவ். இவர், 'காரன்டெக்ஸ்' என்ற பெயரில், 'கிரிப்டோ கரன்சி' எனப்படும், மெய்நிகர் நாணயங்களை வாங்கி - விற்கும், பரிமாற்ற தளத்தை நடத்தி வந்தார்.
இந்த தளத்தின் வாயிலாக ஆறு ஆண்டுகளில், எட்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிரிப்டோ கரன்சி பரிமாற்றம் செய்துள்ளார். இவை அனைத்தும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி அளிக்கவும், போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும், 'ஹேக்கிங்' மற்றும், 'ஆன்லைன்' மிரட்டல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவரை, தேடப்படும் நபராக அமெரிக்க அரசு அறிவித்து இருந்தது. அவர் இந்தியாவில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அவரை கைது செய்வதற்கான வாரன்ட், நம் வெளியுறவுத்துறைக்கு கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வெளிநாடு தப்பிச் செல்வதற்காக கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த அலெக்ஸேஜ் பெசியோகோவை, சி.பி.ஐ., மற்றும் கேரள போலீசார் இணைந்து கைது செய்தனர்.