ADDED : ஆக 05, 2024 12:51 AM

புதுடில்லி: 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்தால் அதிக வருவாய் பெறலாம் எனக்கூறி, லடாக் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை ஏமாற்றிய நிறுவனத்தில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில், 1 கோடி ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
ஐரோப்பிய நாடான பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு 'எமோலியன்ட் காயின்' என்ற கிரிப்டோகரன்சி முதலீடு நிறுவனத்தை, ஹரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த நரேஷ் குலியா என்பவர் 2017ல் துவக்கினார்.
இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக லே பகுதி யில் அஜய் குமார் சவுத்ரி, ரகுமான் மீர், ஜம்முவைச் சேர்ந்த சரண்ஜித் சிங் ஆகியோருடன் நடத்தி வந்தார்.
இந்நிறுவனம் அங்கு வசிக்கும் மக்களிடம், கிரிப்டோகரன்சியில் தொடர்ந்து 10 மாதங்கள் முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் பெறலாம் என நம்ப வைத்து, மோசடியில் ஈடுபட்டது.
ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு எந்த பணமும் கொடுக்கவில்லை. இதில், ஏமாற்றப்பட்ட மக்கள் அளித்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், கிரிப்டோகரன்சி முதலீடு என்ற பெயரில் போலி நிறுவனம் நடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு, அமலாக்கத்துறை விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில், மக்களிடம் பெற்ற பணத்தை, தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதுடன், நிறுவன உரிமையாளர்கள் அசையா சொத்துக்கள் வாங்கியதையும் கண்டறிந்தனர்.
இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 2ம் தேதி லே, ஜம்மு மற்றும் ஹரியானாவின் ஜம்மு ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில், கணக்கில் வராத 1 கோடி ரூபாய் மற்றும் அந்நிறுவன உரிமையாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.