கரையை கடந்தது 'ரேமல்' புயல் மேற்கு வங்கத்தில் ஏழு பேர் உயிரிழப்பு
கரையை கடந்தது 'ரேமல்' புயல் மேற்கு வங்கத்தில் ஏழு பேர் உயிரிழப்பு
ADDED : மே 28, 2024 12:34 AM

கோல்கட்டா : வங்கக்கடலில் உருவான 'ரேமல்' புயல், மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது.
மணிக்கு 135 கி.மீ., வேகத்தில் வீசிய புயல் காற்றுடன், கனமழை வெளுத்து வாங்கியதில் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டன. மேற்கு வங்கத்தில் ஒரு மூதாட்டி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
வங்கக்கடலில் உருவான ரேமல் புயல், மேற்கு வங்கத்தின் சாகர் தீவு, வங்கதேசத்தின் கெபுபரா இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை கடந்தது.
இரவு 8:30 மணிக்கு கரையை கடக்க துவங்கிய புயல், நான்கு மணி நேரம் நின்று நிதானமாக கரையை கடந்ததில், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் பெரும் சேதங்களை விளைவித்தது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 135 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதில் கடலோர மாவட்டங்கள் புரட்டிப் போடப்பட்டன.
தீவிர புயலான ரேமல், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு வங்க தேசத்தின் கேனிங்கில் இருந்து வடகிழக்கே 70 கி.மீ., தொலைவிலும், மோங்லாவில் இருந்து மேற்கு - தென் மேற்கில் 30 கி.மீ., தொலைவிலும் சூறாவளி புயலாக வலுவிழந்ததாகவும், இது மேலும் படிப்படியாக வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சூறாவளிக் காற்றுடன், காலை முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், கோல்கட்டா உட்பட மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்கள் ஸ்தம்பித்தன.
கோல்கட்டாவில் நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று அதிகாலை 5:30 மணி வரை 14.6 செ.மீ., மழை பதிவானது. நகருக்குள் மணிக்கு 74 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது.
வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன, கோல்கட்டா உட்பட புறநகர் பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின் கம்பிகள் சரிந்ததால், பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கோல்கட்டா முழுதும் சாலைகளில் இடுப்பளவு மழை நீர் தேங்கியதால், வாரத்தின் முதல் நாள் பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். புறநகர் ரயில்கள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டன.
கோல்கட்டா விமான நிலையத்தில் இருந்து, 21 மணி நேரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் விமான சேவை படிப்படியாக சீரடைந்தது. வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், புர்பா மெதினிபுர் மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன.
மத்திய கோல்கட்டாவின் பிபிர் பாகன் என்ற இடத்தில், பலத்த மழையால் சுவர் இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார்.
சுந்தர்பன் டெல்டாவை ஒட்டியுள்ள நம்கானா அருகே உள்ள மவுசுனி தீவில் மரம் சரிந்து குடிசை வீட்டுக்குள் விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து ஐந்து பேர் புயல் காரணமாக பலியாகினர்.
மாநிலம் முழுதும், தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 14 குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.