சித்தராமையா அரசுக்கு 'வேட்டு' வைத்த தர்ஷன்; பரப்பன அக்ரஹாரா சிறையில் நடப்பது என்ன?
சித்தராமையா அரசுக்கு 'வேட்டு' வைத்த தர்ஷன்; பரப்பன அக்ரஹாரா சிறையில் நடப்பது என்ன?
ADDED : ஆக 27, 2024 05:15 AM

அரசு போடும் சட்டங்களெல்லாம் சாமானியர்களை கட்டுப்படுத்தத்தான். அரசியல்வாதிகளுக்கும், பணம் படைத்தவர்களும் அந்த சட்டம் வளைந்து கொடுக்கும் என்ற சாமானிய மக்களின் புலம்பல் உண்மை என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் போகிற போக்கில் கொளுத்திப் போட்ட வெடி, இப்படி எல்லாம் வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
வாய்மொழி உத்தரவு
வழக்கு ஒன்றில், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் தன் கட்சிக்காரருக்காக ஆஜரான வக்கீல் ஒருவர், 'பரப்பன அக்ரஹாரா சிறையில் சட்டவிரோத மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் நடமாட்டம் இருக்கிறது.
ஆனால் வீட்டு உணவு வழங்க என் கட்சிக்காரருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது' என, 'வெடிகுண்டு' குற்றச்சாட்டை வீசினார்.
'சிறைக்குள் வெற்றிலை, பாக்கு பரிமாறப்படுவது' உள்ளிட்ட சமாச்சாரங்கள் அன்று உயர் நீதிமன்ற சுவர்களில் பட்டு எதிரொலித்தன.
இந்த குற்றச்சாட்டை மின்னஞ்சல் வழியே எழுப்பியபோதே, சம்பந்தப்பட்ட கைதி தனி சிறையில் அடைக்கப்பட்டதாக நீதிபதியிடம் முறையிடப்பட்டது. எல்லாவற்றையும் கேட்ட உயர் நீதிமன்றமும் சிறையில் சோதனை நடத்துங்கள் என, ஒரு வாய்மொழி உத்தரவை பிறப்பித்தது.
உயர் நீதிமன்றத்தில் முந்தைய காட்சி ஆக., 21ல் நடந்தது. இந்த வழக்கு அடுத்த மாதம் 5ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதற்குள் எல்லாம் சரியாக இருக்கிறது என்பதாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதி, வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தாலும் அதை நிறைவேற்றி, சட்டத்தின் முன் அனைத்துமே சரியாக இருப்பதாக காட்சியை அரங்கேற்றும் பொறுப்பு, தனக்கு உள்ளது என்பதை அரசு செய்து காட்டியது.
அதாவது, 24ம் தேதி காலையில், அதிரடியாக சி.சி.பி., போலீசார், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் நுழைந்தார்களாம்.
டுவிஸ்ட்
அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினார்களாம். தடை செய்யப்பட்ட பொருள் ஒன்று கூட கிடைக்கவில்லையாம். இதைத்தான் அன்று மாலை அதிகாரப்பூர்வமாக நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா அறிவித்தார்.
செப்டம்பர் 5ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மேற்படி வழக்கு விசாரணைக்கு வரும்போது, 'எல்லாம் சரியாக உள்ளது, வழக்கறிஞர் சொன்னது பொய்' என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசு தரப்புக்கு ஏற்பட்டது.
சிறைக்குள் சட்டவிரோத பொருட்கள் நடமாட்டம் இருப்பதை ஒப்புக்கொள்ள அரசு தரப்பு தயாராக இல்லை. இதுவரை எல்லாம் 'யாரோ' திட்டமிட்டபடி சரியாக நடந்தது. அடுத்து நடந்தவை தான், 'டுவிஸ்ட்'.
யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து படமும், வீடியோவும் வெளியாக அரசு தரப்பு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.
அது, கொலை வழக்கில் கைதாகி அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன், பிரபல ரவுடிகளான வில்சன் கார்டன் நாகா, குல்லா சீனா ஆகியோருடன், நாற்காலியில் அமர்ந்து ஒரு கையில் டீ கப்.
இன்னொரு கையில், சிகரெட்டுடன் இருக்கும் படமும், ஒருவருடன் நடிகர் தர்ஷன் 'வீடியோ கால்' பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி, அரசு தரப்புக்கு, 'வேட்டு' வைத்துள்ளது.
சிக்கல்
செப்., 5ம் தேதி மேற்கண்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது சமாளித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்த அரசு தரப்புக்கு, நடிகர் தர்ஷன் விவகாரம், நிலைமையை சிக்கலாக்கி இருக்கிறது.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசுக்கு நடிகர் தர்ஷன் வைத்த, 'வேட்டு' வெடிக்குமா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
- நமது நிருபர் -