ADDED : ஜூன் 22, 2024 04:22 AM

பெங்களூரு: ''நடிகர் தர்ஷன் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார். அவருடன் இருப்பவர்களே, அவர் மீது பழி போட்டனரா என்பதும் தெரியவில்லை,'' என மத்துார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., உதய்கவுடா தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நடிகர் தர்ஷனுக்கு முன்கோபம் அதிகம். தன் ரசிகர்கள், ஊடகத்தினருடன் கோபமாக பேசுவார். ஆனால் கொலை செய்யக் கூடியவர் அல்ல. தற்போது போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விசாரணை முடிந்த பின் பார்க்கலாம்.
பல ஆண்டுகளாக தர்ஷன் எனக்கு நண்பர். அவர் கொலை செய்திருப்பாரா என்பது தெரியவில்லை. அவருடன் இருப்பவர்களே, குற்றத்தை செய்து விட்டு அவர் மீது பழி போட்டனரா என தெரியவில்லை. விசாரணையில் அனைத்தும் வெளிச்சத்துக்கு வர வேண்டும்.
நான் இப்போதே எதையும் கூற மூடியாது. அதிகாரிகள் விசாரிக்கின்றனர். முடிவில் உண்மை தெரியும். மாநில மக்களுக்கும் தெரியும். நாங்கள் யாரும், தர்ஷனை காப்பாற்றும்படி, முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை.
கன்மேன் மீது தர்ஷனின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறுவது பொய். என்னிடம் ஐந்தாறு கன்மேன்கள் உள்ளனர். தாக்குதல் நடந்திருந்தால், எனக்கு தெரிந்திருக்காதா. அப்படி எதுவும் நடக்கவில்லை. இது வெறும் கற்பனை.
இவ்வாறு அவர் கூறினார்.

